Skip to main content

பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிற்கு எதிரே உள்ள பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணிக்காக தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் அடைப்பை எடுக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. 
 

இந்த வாகனத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் குடிதாங்கியை சேர்ந்த ராஜா தலைமையில் வீரமணி மற்றும் மேலக்காவேரி தங்கையா நகரைச் சேர்ந்த சாதிக்பாட்சா (55 வயது) உள்பட 4 பேர் கழிவுநீர் அடைப்பை சரிசெய்வதற்காக பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கினர். அப்போது சாதிக் பாட்சா விஷ வாயு தாக்கி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார். பதட்டமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் என்ன செய்வதென புரியாமல் தவித்தனர். பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாகியும் வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர்.

 underground drainage


இந்த தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, வழக்கறிஞர்கள் விவேகானந்தன், இளங்கோவன் உள்ளிட்ட சமூக  ஆர்வலர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே அமர்ந்து மீட்புப் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் தகவலறிந்த கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், நகர் நல அலுவலர் பிரேமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  

 underground drainage


பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக்பாட்சாவை தீயணைப்பு துறை அதிகாரிகள் தேடினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாதிக்பாட்சாவின் உடலை இறந்த நிலையில் மீட்டனர். பின்பு உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழருவி கூறியதாவது, " உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பாதாள சாக்கடையில் இறங்கி கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தகூடாது என தடை விதித்துள்ளது. ஆனால் தனியார் ஒப்பந்தக்காரர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல், குறைந்த ஊதியத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை பாதாள சாக்கடை துப்புறவு பணியில் ஈடுபடுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பாதாள சாக்கடையில் இறங்கி பணியில் இருக்கும்போது உயிரிழந்த சாதிக் பாட்சாவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி  அளிக்க வேண்டும்.

 underground drainage


நகராட்சி நிர்வாகத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திர மனிதனான ரோபோட்டை பயன்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தற்போது அது பயன்பாடு இல்லாமல் இருந்து வருவது வருந்தத்தக்கது. இது போன்ற மனித உயிர் இழப்பு இல்லாமல் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.