சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் மீதான வழக்கு! -ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

UNDER GROUND WATER ERODE DISTRICT COLLECTOR CHENNAI HIGH COURT

சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறிய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழுமையாக சீல் வைக்காமல், போர்வெல் அமைந்துள்ள பகுதிகளுக்கு மட்டும் சீல் வைக்க வேண்டும் என்றும், ஒருவேளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து நீர் எடுப்பது தெரிய வந்தால், உடனடியாக ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் சீல் வைக்கலாம் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்மந்தப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி அனந்த பத்மநாபன், நீதிமன்ற உத்தரவை மீறி, ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்த நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதால், தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக செயல்படுவதா என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாகவும், நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து, உடனடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். பின்னர் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் போத்திராஜ், நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் என, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஒருவேளை நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறும் பட்சத்தில், மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடலாம் என மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து, விசாரணையை டிசம்பர் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

chennai high court Erode under ground water
இதையும் படியுங்கள்
Subscribe