Skip to main content

பிடிபடாத அரிக்கொம்பன்; தொடர் தாக்குதலில் ஏற்பட்ட சோகம்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

uncaught arisikomban; one person passed away

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சின்னகானல் பகுதியில் 10 பேருக்கும் மேற்பட்டோரை தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் எனும் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. முதற்கட்டமாக மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஏற்கனவே இந்த அரிக்கொம்பன் யானை கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஆறு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி புலிகள் காப்பகத்தில் விடப்பட்டிருந்தது. அங்கிருந்து மேகமலைச் சென்ற யானை மீண்டும் குமுளியில் இறங்கி தற்போது கம்பம் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளது. இரண்டு நாட்களாக வனத்துறைக்கு அரிசிக்கொம்பன் போக்கு காட்டி வருகிறது.

 

அரிக்கொம்பன் யானையானது கம்பம் சுருளிபட்டி அருகே உள்ள கூத்தநாச்சியார் காப்பு காட்டிற்குள் சென்றது. தொடர்ந்து அரிக்கொம்பன் நடமாட்டம் இருப்பதால் மேகமலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

 

அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க வன அதிகாரிகள் மூன்று கும்கி யானைகளுடன் கடுமையாக முயற்சித்தாலும் அவர்களிடம் பிடிபடாமல் காட்டு யானை தொடர்ந்து நடமாடிக் கொண்டே இருக்கிறது. யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள செயற்கைக் கோள் பட்டையுடன் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும் யானை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகமாகவே உள்ளன. யானையின் தொடர் நடமாட்டத்தினால் கம்பம் பகுதியில் மக்கள் தொடர்ந்து 4 நாட்களாக வீட்டிற்குள் முடங்கினர். தற்போது அரிக்கொம்பன் சுருளிபட்டியில் நடமாடி வருகிறது. இதுவரை பத்து பேரை தாக்கியுள்ள அரிக்கொம்பன் 70க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளைச் சேதப்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் தேனி கம்பம் நகரில் அரிக்கொம்பன் யானையால் தாக்கப்பட்ட பால்ராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 27 ஆம் தேதி ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை பால்ராஜை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பால்ராஜ் உயிரிழந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடி அலையும் யானை கூட்டம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Herd of elephants wandering in search of water - forest department warns motorists

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட  ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும் விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலை வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.  

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீரை தேடி யானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது. எனவே வாகன ஓட்டிகள் இந்தப் பகுதியைக் கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதைப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.