Skip to main content

உளுந்தூர்பேட்டையில் ஒருவர் பட்டப்பகலில் கொலை - கொலைவெறி கும்பல் தப்பியோட்டம்!! இருவர் கைது.

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் தக்கா பகுதியில் உள்ள துணை மின் நிலையம் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் வயது 35 என்ற வாலிபரை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை காரால் இடித்து கீழே தள்ளி மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
 

ulundurpettai incident



கொலை செய்த மர்ம கும்பல் காரை அதே இடத்தில் விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 35 இவர் உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். 


மூலசமுத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையம் எதிரே செல்லும் போது எதிரில் ஒரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து சாலையின் வலது புறத்தில் இருந்த பள்ளத்தில் தள்ளியுள்ளனர் பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்கள் காரில் வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்துக்கொண்டு சினிமா பட காட்சிபோல் இறங்கி வந்து மணிகண்டனின் உடலில் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை பார்த்த அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து காரை நிறுத்தி விட்டு உடனடியாக நான்கு புறங்களிலும் சிதறி ஓடினர்.

இதை அப்பகுதி மக்கள் நேரில் பார்த்ததோடு உடனடியாக அவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசி மற்றும் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டனை கால் இடுப்புக் கீழே தள்ளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார் கொலையாளிகள் குறித்தும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் இருந்த பதிவு எண்ணைக் கொண்டு மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கூலிப் படையினரால் மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பியோடிய இருவர் ஆட்டோவில் ஏறி சென்றதாக அங்குள்ள மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் கரும்பு வயல்வெளிக்குள் பதுங்கியிருந்த இருவரை கைது செய்தனர். மேலும் இருவருக்கு  போலீஸ் வலைவீச்சு.

 

சார்ந்த செய்திகள்