nn

திருப்பதி லட்டு சர்ச்சைக்கு மத்தியில் 'சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது' என ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருந்தார். அதற்கு 'லெட்ஸ் வெய்ட் அண்ட் சி' என தமிழக துணை முதல்வர் உதயநிதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தது பேசு பொருளாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் ஆந்திராவில் ஒரு தரப்பினர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். கோவில் வாசலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் மீது சிலர் ஏறி நின்று இழிவுபடுத்தும் வகையிலான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இந்த விவகாரத்திற்கு பதிலளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில்' என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

Advertisment

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

Advertisment

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்' என குறிப்பிட்டுள்ளார்.