Skip to main content

“நான் உங்க வீட்டு பிள்ளை..” - மீனவ மக்களிடம் நெகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

udhayanidhi stalin talk about fisherman

 

திமுக இளைஞா் அணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 21 ஆம் தேதி கன்னியாகுமரியில் 'இல்லம் தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். பின்னர் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைபதிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாலையில் முட்டம் கடற்கரையில் நடந்த உலக மீனவர் தின வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். 

 

மீனவர் தின விழாவில் கலந்து கொள்ள சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் மீனவர்கள் செண்டை மேளம் கொட்டி, கொடி தோரணத்துடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். உலக மீனவர் தின வெள்ளி விழாவை அரசு விழாவாக நடத்த தமிழக மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அனுமதி அளித்ததை அடுத்து, இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் மற்றும் துறை இயக்குனர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், எஸ்.பி.ஹாிகிரன் பிரசாந்த் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

 

தொடர்ந்து விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “குமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராம மக்கள் இணைந்து நடத்தும் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு உள்நாட்டு மீனவா்களோடு கடற்கரை மீனவா்களும் சோ்ந்து 5 லட்சம் பேர் வாழ்கிறீா்கள். உங்களை கடலோர அமைதி மற்றும் வளா்ச்சிக்குழு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்துவது பெருமையாக உள்ளது.

 

udhayanidhi stalin talk about fisherman

 

என்னிடம் நீங்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். அதுபோல் மேலும் பலர் என்னிடம் பல கோரிக்கைகளை மனுக்களாக தந்துள்ளனர். நான் இங்கு வரும்போது நீங்கள் என்னிடம் உங்கள் கோரிக்கைகளை தருவீர்கள் என்று தெரியும். அதனால்தான் துறை மந்திா்ியையும், துறை இயக்குனரையும் கையோடு அழைத்து வந்துள்ளேன். இங்கு என்னை பற்றி பேசிய பலர் நான் எம்.எல்.ஏ.யாக, இளைஞரணி செயலாளராக, சின்னவராக, கதாநாயகனாக வந்திருக்கிறேன் எனக் கூறினாா்கள். அதையெல்லாம் விட நான் பெருமையாக சொல்லுகிறேன், உங்க வீட்டு பிள்ளையாக வந்திருக்கிறேன் என்று. இதற்கு காரணம் என்னுடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பாதி இடமே மீனவர்கள் தான் வசிக்கிறார்கள். எம்.எல்.ஏ. அலுவலகமே அங்குதான் உள்ளது. கை-ரிக்ஷாவை ஒழித்துக் கட்டிய கலைஞர் அரசு தான் மீன்பிடி படகுகளுக்கு இயந்திரம் பொருத்தி விசைப்படகுகள் தந்தது. மேலும் மீனவர் நலவாரியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், டீசலுக்கு மானியம் தந்தது எல்லாமே கலைஞர் தான்.

 

தற்போது மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரமாக உயர்த்தி இருப்பது முதல்வர் தலைமையிலான அரசு. விரைவில் அது 8 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். அதேபோல்  நீங்கள் தந்திருக்கும் கோாிக்கைகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக முதல்வரிடம் பேசி அதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்” என்றாா். விழாவில் ஆயிரக்கணக்கான மீனவா்களும் மீனவப் பெண்களும் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.