Skip to main content

"அண்ணனாக தம்பியாக மகனாக பேரனாக சேவை புரிய காத்திருக்கிறேன்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

udhayanidhi stalin karur meeting talks about dmk government schemes

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு 267.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக ஏற்பாடு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி. கரூர் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். தமிழகத்தின் முன்னோடி மாவட்டம் கரூர். மேடையில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு நன்றி. கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சிறப்பு திட்டமாக 50 திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாவட்டங்களை பொறாமை பட வைத்து, அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி வருபவர் செந்தில் பாலாஜி.

 

தொழில் நகரமான கரூர் டெக்ஸ்டைல், பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக உள்ளது. திமுகவிற்கு வாக்களிக்காத மக்களும் பாராட்டும் வகையில் செயல்படுவோம் என்று கூறியதை போலவே முதல்வர் செயலாற்றி வருகிறார். கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலை தொகுதியில் என்னை போட்டியிட அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலின்போது வற்புறுத்தினார். பெண்கள் ஸ்டாலின் பஸ் என்று கூறும் அளவுக்கு சிறப்பு திட்டமாக மாறியுள்ளது. விவசாயிகளுக்கு 1,50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட்டவர் முதல்வர்.

 

காலை சிற்றுண்டி மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். முதல்வரின் 2 ஆண்டுக்கால மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட நேரம் போதாது. 20 மாதங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம். தேர்தலுக்காக அல்ல. அதற்காகவே இந்த மாதிரியான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. என்னுடைய துறையான மகளிர் சுயஉதவி குழு மூலம் கரூர் மாவட்டத்தில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்கள் மூலமாக பாரம்பரிய தின்பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அண்ணனாக தம்பியாக மகனாக பேரனாக எந்த நேரமும் உங்களுக்காக பணியாற்ற, சேவை புரிய காத்திருக்கிறேன்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்