Skip to main content

திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது; வேதாரண்யத்தில் சாலை மறியல்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

Udayanidhi Stalin in Thirukuvalai

 

திருக்குவளைக்கு பிரச்சாரத்திற்கு வந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, மேடையில் வைத்தே போலீசார் கைது செய்தனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான, 100 நாள் பிரச்சாரப் பயணத்தை தொடங்க திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின், முதல்நாள் பிரச்சாரமாகக் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில், இன்று (20 ஆம் தேதி) துவங்கவிருந்தார். திருச்சியில் இருந்து திருவாரூர் வந்தவர், அங்கு சன்னதி தெருவில் இருக்கும், அவரது உறவுக்காரர் வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு, காட்டூரில் அமைந்துள்ள அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, திருக்குவளைக்குச் சென்றார்.

 

அதற்கு முன்பே, திருவாரூர் நாகப்பட்டினம் எஸ்,பி, தஞ்சை சரக டி.ஐ.ஜி அங்கு முகாமிட்டிருந்தனர். 'திருக்குவளைக்கு 5 வாகனத்திற்கு மேல் வந்தால் கைது செய்வோம், அதோடு வீட்டு வாசலில் அமைக்கப்பட்டிருந்த, மேடையில் ஏறி பிரச்சாரம் செய்தால் கைது செய்வோம்' எனக் கூறியிருந்தனர்.

 

Udayanidhi Stalin in Thirukuvalai


அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பாணியில், திருக்குவளையில் உள்ள கலைஞரின் வீட்டிற்குச் சென்று, அங்குள்ள கலைஞர், தயாநிதிமாறன் உள்ளிட்டவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அங்கு, "கரோனாவில் நடந்த ஊழலில் துவங்கி அ.தி.மு.க அரசின் அவலங்கள் என பலவற்றைப் பட்டியலிட்டு விமர்சித்தார். அதோடு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறினார். அங்கிருந்து அப்படியே அடுத்த நிகழ்வுக்குச் சென்று விடுவார் எனக் கட்சிக்காரர்கள் காத்திருக்க, சரசரவென மேடையில் ஏறிய உதயநிதி, கரோனாவால் மறைந்த துரைக்கண்ணுவின் மரணத்தில் நடந்த பேரம், நீட் தேர்வு அவலம் உள்ளிட்டவைகளைப் பட்டியலிட்டு கூறிய பிறகு மேடையை விட்டு இறங்கினார்.

 

Udayanidhi Stalin in Thirukuvalai


மேடைக்கு அருகில் தயார் நிலையில் இருந்த காவல்துறையினர், அவரை கைது செய்து திருக்குவளையில் உள்ள எம்.வி.கே திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். உதயநிதியின் கைதைக் கண்டித்து, வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.சதாசிவம் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் நாகப்பட்டினம் சாலையில் உள்ள செம்போடை உள்ளிட்ட மூன்று இடங்களில்  சாலை மறியலில் இறங்கினர்.

 

இந்நிலையில், தற்பொழுது கைது செய்யப்பட்ட தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட கட்சியினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.