Skip to main content

திருச்சியில் பயங்கரம்; இளைஞர்கள் அடுத்தடுத்து படுகொலை!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

two youth passed away in Trichy

 

திருச்சி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே  உடல் சிதைந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக நேற்று காலையில் அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த நபருக்கு 40 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முகம் முழுவதும் சிதைந்த நிலையில் உயிரிழந்த நபரின் உடலை குற்றவாளிகள் பாலத்தின் மேற்புறம் இருந்து தூக்கி வீசிச் சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இறந்தவர் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை தெரியவில்லை என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த உடல் மீட்கப்பட்டதிலிருந்து 5வது கிலோமீட்டரில் உள்ள பொன்னுசங்கம்பட்டி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் மற்றொரு இளைஞர் இதேபோல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டர்.

 

அதில் குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டவர் உடலில் இருந்த காயமும், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள உடலில் உள்ள காயமும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், வேறு எங்காவது வைத்து கொலை செய்துவிட்டு, இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றிருக்கலாம் என்றும், இந்த இரு கொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர், எஸ்.பி. சுஜித் குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.  திருச்சி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்