Skip to main content

எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட இரு இளைஞர்கள்! கல்லூரி முன்விரோதம் காரணமா? 

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

Two young men attacked by Eight members police investigation

 

கும்பகோணத்தில் இரண்டு இளைஞர்களை வழிமறித்து எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

கும்பகோணம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் யோகேஸ்வரன் (25). சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவரின் மகன் நந்தகுமார் (22). நண்பர்களான இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிவருகின்றனர். இந்நிலையில், நேற்று (16.11.2021) இரவு இருவரும் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள லேப்டாப் சர்வீஸ் செண்டரில் தங்களது லேப்டாப்பை சர்வீஸ் செய்ய கொடுத்துவிட்டு, வீடு திரும்பியுள்ளனர். அப்படி திரும்பியபோது, சபரி நகர் அருகே 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்துவந்து வழிமறித்து, கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர். 

 

ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்ந இருவரும், மர்ம கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக போராடி ஓடியுள்ளனர். ஆனாலும் அவர்களை அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று யோகேஸ்வரனை சரமாறியாக எட்டு இடங்களில் வெட்டினர். அவருடன் சென்ற நந்தகுமாரையும் விடாமல் வெட்டியுள்ளனர். 

 

படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த யோகேஸ்வரனின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொ) மோகன் தாஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

 

இந்தக் கொலை முயற்சி குறித்து விசாரித்துவரும் போலீசார், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கல்லூரியில் நடந்த தகராறில் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்துவருகிறோம்” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.