Skip to main content

ஒன்றுக்கு ரெண்டு பொண்டாட்டி ... என்ன வாழ்க்கை? ஓடிப் போயிட்டாங்க... கைதுக்கு முன்பு போலீசிடம் புலம்புல்...

Published on 04/11/2019 | Edited on 04/11/2019


 

நான்கு நடைமேடை கொண்ட முக்கிய ரயில் நிலையம் மேற்கே திருப்பூர், கோவை, வெளி மாநிலமான கேரளா செல்லவும், கிழக்கு பகுதியில் சென்னை, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும் மற்றொரு பாதை மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு செல்லும் வழியாக என நாள் ஒன்றுக்கு சுமார் நூறு ரயில்கள் இங்கு நின்று பிறகு குடிநீர் ஏற்றுதல், பராமரிப்பு வேலைகள் இருந்தால் அவற்றை சரி செய்து பிறகு ரயில்கள் கிளம்பும் சந்திப்பு தான் ஈரோடு ரயில் நிலையம். 
 

நேற்று 3ந் தேதி மாலை சுமார் 04.15 மணிக்கு சென்னை மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பரபரப்பும், பதட்டமாகவும் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. ஆம், ஈரோடு இரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் தான் அந்த தகவல்.

 

erode


 

மேலும் போனில் பேசிய நபர், ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதக் குழு தளபதி ஒருவர் அனுப்பி இருப்பதாகவும், முடிந்தால் மக்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். இதனால் பதட்டமடைந்த ஈரோடு போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழு, மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் ஈரோடு இரயில் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு நின்ற ரயில்கள், பிறகு வந்த ரயில்கள் எஞ்சின் முதல் கழிவறை வரையிலும் பயணிகள் உடமைகள் நடைமேடைகளில் ரயில் பயணத்திற்காக காத்திருந்த மக்கள், கடைகள், ரயில்வே அலுவலகங்கள் என ஒவ்வொரு இடங்களிலும் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு உள்ளதா என கடுமையாக சோதனையிட்டு ஆராய்ந்து பார்த்தனர்.


 

 

ஒரு மணி நேரமாக மக்கள் பதைபதைப்புடன் இருந்தனர். ஈரோடு முழுக்க வெடிகுண்டு செய்தி வேகமாக பரவியது. ஆனால் அங்கு எவ்வித வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை தெரிந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் அழைப்பை போலீசார் ஆய்வு செய்ததில், மேற்கண்ட போன் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் அந்த போன் நெம்பரை பயன்படுத்தி வந்ததும், அந்த போன் வாங்குவதற்கு அவரது உறவினர் சிவகுமார் என்பவர் உதவியுள்ளதாகவும் போலீசுக்கு தெரிய வந்தது.
 

அவர்களை கொண்டு வந்து விசாரணை செய்ததில் லிங்கராஜ் சென்ற 1ந் தேதி  இரவு குடிபோதையில் போனை தொலைத்து விட்டதாக கூற, அதன் பிறகு யார் இந்த போனை பயன்படுத்தினார்கள் என தேடினார்கள். செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில் அதே ரயில் நிலைய டவர் வளாகத்திற்குள் ஒரு நபர் போனை உபயோகப்படுத்தி வருவது தெரிந்தது. போலீசார் விடாமல் துரத்த சந்தோஷ் என்ற பெயர் உள்ளவன் என தெரியவந்தது. மேற்கண்ட நபரின் அங்க அடையாளங்கள், உடை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சேகரித்து தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு மறைவான இடத்தில் சந்தோஷ் படுத்திருந்தான்.
 

தூங்கிக் கொண்டிருந்தவனை போலீஸ் எழுப்பி விசாரிக்க "வாங்கைய்யா வாங்க... நீங்க வருவீங்கனு எனக்கு நல்லா தெரியும்" என மிக சாதாரணமாக சந்தோஷ் கூறியிருக்கிறான். பிறகு எனக்கு சாப்பாடு வேண்டும் என சந்தோஷ் கேட்க, போலீசார் சாப்பாடு கொடுத்து, ''சொல்லுப்பா... ஏப்பா இப்படி அலைய விட்டு அநியாயம் பன்னுனே'' என கேட்டுள்ளனர்.


 

 

''ஐயா எனக்கு 41 வயது. எங்கப்பா பெயரு ரங்கராஜன், மேட்டுப்பாளையம் தான் எனது ஊரு, என் கதைய கொஞ்சம் பொறுமையா கேளுங்க. எனக்கு ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டிங்க, ஆமாங்க முதபொண்டாட்டி கல்யாணமாகி ஒரே வருடத்துல எதுத்தவூட்டுல கல்யாணமாகாத 35 வயசு வாலிபன் ஒருவனுடன் பழக்கமாகி ரெண்டு பேரும் என்னைய விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்புறம் ஒரு வருசமா தேடுனே பொண்டாட்டிய கண்டுபிடிக்கவே முடியலே. அப்புறமா நாமும் புதுப் பொண்டாட்டி கட்டிக்கலாம்னு பொன்னு பாத்து ரெண்டாவதா ஒருத்திய கல்யாணம் பண்ணி முடிச்சேன். அவளும் ஒரு வருசம் தான் என்னோட வாழ்ந்தா அவ வேலைக்கு போன இடத்துல ஒருத்தன் கூட கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடைசில என்ன விட்டுட்டு அவங்கோட ஓடிப் போயி நல்லதொடர்பு ஏற்படுத்திக்கிட்டா. இரண்டு திருமணமும் எனக்கு பெயிலியர் ஆகிப் போச்சு. மனைவிகள் மற்றவர்களுடன் ஓடிவிட்டதால என்ன செய்ய முடியும்னு நான் மனமுடைந்து கெடந்தேன். ஏற்கனவே ஒரு முறை வீட்டைவிட்டு சென்று பத்து நாட்கள் வெளியூர்ல இருந்தேன் இப்போது சிறுமுகை அருகே உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தேன் அங்கே வேலை அதிகமாக இருந்ததால் வேலை செய்யபிடிக்காமல் மனஉளைச்சலில் வீட்டை விட்டு நான்கு நாட்களுக்கு முன்பே வந்துட்டேன், சாப்பிட வழியில்லே அப்போதுதான் ஒரு யோசனை வந்துது ஜெயிலுக்கு போனால் மூணு வேலை சாப்பாடு கிடைக்கும்னு அந்த எண்ணத்தில் தான் கீழே கெடந்த இந்த செல்போன் மூலம்  100 எண்ணுக்கு ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து, பாம் வைத்து இருப்பதாக போன் செய்தேன். போலீஸ் என்னை பிடிப்பீங்கனு எனக்கு நல்லா தெரியுமுங்க... பொண்டாட்டிகளும் இல்லே இன்னொரு பொண்டாட்டி கட்டினாலும் அவளும் இன்னொருத்தன் கூட ஓடிப் போயிடுவா... வாழ்க்கையே வெறுத்துப் போச்சுங்க...." என விரக்தியுடன் சந்தோஷ் பேச, கூட்டிச் சென்ற போலீசார் சந்தோஷ் எதிர்பார்த்தது போல "மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் நோக்கில் குற்றம் செய்யும் எண்ணத்துடன் செயல்பட்ட காரணத்திற்காக " என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர் பிறகு  நீதிமன்றம் சென்று சிறை வரை உடன் சென்று ஜெயிலுக்குள் அனுப்பி வைத்தனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.