Skip to main content

இரண்டு புலியைக் கொன்றவர் கைது! 

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Two tiger passes away case police arrested one

 

நீலகிரி மாவட்டம், உதகை அருகே இரண்டு புலிகள் உயிரிழந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, புலிகள் இறந்து கிடந்த பகுதிக்கு அருகே பசுமாடு ஒன்றும் உயிரிழந்து கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், விலங்குகள் விஷம் வைத்து  கொல்லப்பட்டிருக்கலாம் எனவும்  சந்தேகம் எழுந்தது. இதனால், வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தற்போது மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி நேரு நகர் பகுதியில் 8 வயதான புலியும் மற்றொரு வனப்பகுதியில் 3 வயதான மற்றொரு புலியும் இறந்து கிடந்தது தொடர்பான தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை தெரிய வந்தது. இந்த பகுதிகளுக்கு அருகே மாடு ஒன்றும் உயிரிழந்து கிடந்துள்ளது. இது வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே விலங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. பின்னர், நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

விலங்குகள் இறந்து கிடந்த பகுதியை சுற்றி வனத் துறையினர் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது தான், அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவரின் மாடு சமீபத்தில் காணவில்லை என்பதனை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சேகரை வனத்துறையினர் விசாரிக்க தொடங்கினர். விசாரணையின் போது, சேகரின் மாடு வனவிலங்கால் தாக்குண்டு இறந்துள்ளதும். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் மாட்டின் உடலில் பூச்சி மருந்தை தடவியுள்ளதாக சேகர் வனத்துறையிடம் கூறியுள்ளார். இதனடிப்படையில், சேகர் கைது வனத்துறையினரால் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

 

மேலும், ஆனைக்கட்டி அருகே உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்திற்கும். கோயம்புத்தூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு புலிகளின் உறுப்பு மாதிரிகள் தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், புலிகள் இறந்த காரணத்தை சரியாக கண்டறியப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதலில் தலைகாட்டிய சிறுத்தை; உடனே வந்த கரடி; வைரலாகும் வீடியோ

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
The leopard that first showed its head; The bear that came immediately; A viral video

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. நடமாடும் சிறுத்தையின் படத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது. 8 மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதேபோல் ஊட்டியில் குடியிருப்பு பகுதி ஒன்றில் சிறுத்தை ஒன்று நடமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல, அடுத்த நொடியே கரடி ஒன்றும் அதே குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இந்த காட்சிகள் இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது.

Next Story

உதகையில் தள்ளுமுள்ளு; எஸ்.பி. வாகனத்தை சேதப்படுத்திய அதிமுகவினர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் எல். முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் இருவரும் இன்று ஒரே நாளில் உதகையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்பாக எல். முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய 11 மணி முதல் 12 மணி வரை நேரம் ஒதுக்கித் தர கேட்டிருந்தார். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று அதிமுக வேட்பாளருக்கும் அதற்கு அடுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல். முருகனும், பாஜக நிர்வாகிகளும் கோவில்களுக்குச் சென்றுவிட்டு  தாமதமாக 12 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனிடையே எல்.முருகன் தாமதமாக வந்ததால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கில் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

police and AIADMK pushed back when they filed their nomination papers in Utagai

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் தாமதமாக வந்து எங்கள் நேரத்தில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்று அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதனைத் தொடர்ந்து  பாஜக - அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே பாஜவினர் பேரணி செல்வதால் சற்று நின்று செல்லுமாறு காவல்துறையினர் அதிமுகவினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதிமுகவினர் அதனைக் கேட்காமல் போலீசாரின் தடுப்புகளை மீறிச் சென்றதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த காவல் கண்காணிப்பாளர் வாகனத்தை மறித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.