கடலூர் மாவட்டம் வழியாகப் பாயும் தென்பெண்ணையாற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வேடிக்கை பார்த்துவருகின்றனர். அதன்படி, கடலூர் அருகிலுள்ள முள்ளிகிராம்பட்டு பகுதியில் அந்தக் கிராமத்தினர் குடும்பமாகச் சென்று தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் குளித்தும், விளையாடியும், வேடிக்கை பார்த்தும் களித்துக்கொண்டிருந்தனர். மேலும், கைபேசியில் படங்கள் எடுத்தும், பல்வேறு செயலிகள் மூலமாக நடனமாடி வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தனர்.
அப்போது முத்துலிங்கம் என்பவரது மகன் லோகேஷ்வரன் (18) திடீரென வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டார். இதனைப் பார்த்த அவரது உறவினரான நாகராஜ் மகன் மாதவன் (21) என்பவர் தண்ணீரில் இறங்கி லோகேஷை காப்பாற்ற முயன்றுள்ளார். அவரையும் தண்ணீர் இழுத்துச் செல்லவே, மாதவனின் இரட்டையரான சகோதரி மாளவிகா (21) என்பவரும் தண்ணீருக்குள் இறங்கியுள்ளார். அப்பகுதியில் மணல் எடுக்கப்பட்டிருந்ததால் சில அடிகளில் அதிகப்படியான ஆழம் ஏற்பட்டு தண்ணீர் சுழலுடன் சென்றுள்ளது. இந்தச் சுழலில் 3 பேரும் சிக்கிக்கொண்டு மூழ்கினர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் லோகேஷ்வரன், மாளவிகா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மாதவனை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
மாளவிகா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், லோகேஷ் கல்லூரியில் முதலாமாண்டும் படித்துவந்தனர். மாதவன் கல்லூரிப் படிப்பை முடித்தவராவார்.
ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் இறந்த நிலையில், மேலும் ஒருவர் தேடப்பட்டுவருவது அந்தக் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலங்களை மீட்ட போலீசார், கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.