4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 2 சிறுவர்கள் மீது பாய்ந்தது போக்சோ!

Two school students arrested under pocso

கெங்கவல்லி அருகே, 4 வயதே ஆன சிறுமியிடம் ஒரே பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் விமலாஸ்ரீ (4 வயது, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எல்.கே.ஜி. படித்து வருகிறார். ஆக. 5ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அன்று இரவு திடீரென்று வயிற்று வலியால் அவதிப்பட்டார். பதற்றம் அடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி, பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர், சிறுமி படித்து வரும் தனியார் பள்ளியில் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயதான சிறுவனும், 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயதான சிறுவனும் பள்ளி வேனில் வைத்து சிறுமி விமலாஸ்ரீயை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு சிறுவர்களையும் அழைத்து விசாரித்தபோது, சிறுமியிடம் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறுவர்கள் மீது ஆத்தூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சேலம் இளஞ்சிறார் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர்கள் இருவரும் சேலம் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 4 வயதே ஆன சிறுமியிடம், பள்ளிச்சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

POCSO police Salem
இதையும் படியுங்கள்
Subscribe