Skip to main content

தொழில் போட்டி... மக்கள் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Two private buses collided with each other Coimbatore

 

கோவையில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துகள், தொழில் போட்டியால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பயணிகளை பதைபதைக்க வைத்துள்ளது.

 

தமிழ்நாட்டில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகின்றன. சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக ஏகப்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம், பேருந்து நிலையத்தில் இருக்கும் தனியார் பேருந்துகளில் யார் அதிக பயணிகளை ஏற்றிச்செல்வது; யார் அதிக வேகத்தில் முண்டியடித்துக்கொண்டு செல்வது என தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், பேருந்து ஊழியர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே கிளம்பிய இரண்டு தனியார் பேருந்துகள் தொழில் போட்டி காரணமாக ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு அதிவேகத்துடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த இரண்டு பேருந்துகளும் பீளமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நடுரோட்டில் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த இரண்டு பேருந்துகளில் இருந்த பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அதுமட்டுமின்றி, நடுரோட்டில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தனியார் பேருந்துகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதோடு விட்டுவிடாமல், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.