Skip to main content

"என்னடா சல்லி சல்லியா நொறுக்கீட்டிங்க" - பேருந்து உரிமையாளர் வேதனை

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

two private bus crushed bus stand

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை, கும்பகோணம், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பேராவூரணி எனப் பல முக்கிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூரைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகளை விடத் தனியார் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகிறது. இந்தச் சூழலில் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

மேலும், பஸ் ஸ்டாண்டில் இருக்கும் தனியார் பேருந்துகளில் யார் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது, யார் அதிக வேகத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்வது என அந்தப் பேருந்தின் ஊழியர்கள் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இதனால் பேருந்து ஊழியர்கள் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் புறப்படத் தயாராக இருந்துள்ளது. அப்போது அந்த இரண்டு தனியார் பேருந்துகள் இடையே நேரப் பிரச்சனைக் காரணமாக திடீரென தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு, சாலையில் இறங்கிய ஊழியர்கள் பொதுமக்கள் மத்தியிலும், பயணிகள் மத்தியிலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் நடு ரோட்டிலேயே தாக்கிக் கொள்ளும் அளவிற்கு இந்தப் பிரச்சனை சென்றுள்ளது.

 

இதைக் கண்ட சக பயணிகளும், ஊழியர்களும் கைகலப்பிலிருந்த ஊழியர்களைச் சமாதானப்படுத்தினர். அப்போது ஆத்திரம் அடங்காத ஒரு பேருந்து ஊழியர் பஸ்-சை ரிவர்ஸ் எடுத்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு பேருந்துகளிலிருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறியது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் அந்த இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சேதாரமாகியுள்ள இரண்டு பேருந்துகளையும் சீர் செய்ய அதிகளவில் பொருட்செலவு ஆகும் என்பதால் பேருந்து உரிமையாளர்கள் வேதனையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்; திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Youth lost their life at Trichy Central Bus Station
கோப்புப்படம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்குச் செல்ல பரபரப்புடன் இருந்தனர். அப்பொழுது மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஒரு மஞ்சள் நிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சாலையின் நடுவே இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ் வாலிபரை கடக்க முயன்றபோது திடீரென்று அந்த வாலிபர் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தலையை விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பஸ்சின் பின் சக்கரம் அந்த வாலிபரின் தலையில் ஏறி நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நேரில் பார்த்த பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

முதலில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசார் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேமராவில் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு வாலிபர் நின்று கொண்டிருப்பதும் திடீரென்று தனியார் பஸ் அந்த வழியாக வரும் பொழுது பஸ்சின் பின் சக்கரத்தில் திடீரென்று பாய்ந்து தலையை விட்டு உடல் நசுங்கி இறந்ததும் தெரிய வந்தது.

இறந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன காரணத்துக்காக தற்கொலை முயற்சி செய்தார் என்ற முழு விவரம் தெரியவில்லை. பிறகு போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பெயர் ரமேஷ் (வயது 42) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் ஹோட்டல் வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மனமுடைந்து பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதற்கு இடையில், அந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மதுரை பேருந்து நிலைய வணிக வளாகத்தில் தீ விபத்து!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Fire incident in Madurai bus station commercial complex

மதுரை பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் புதியதாக 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகம் சுமார் 95 சதவித பணிகள் முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. அதே சமயம் மீதமுள்ள 5 சதவிகித இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்படவில்லை எனவும், கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பயன்படுத்திய தீக்குச்சி மூலம் அங்கிருந்த குப்பைகளில் தீ பற்றி  விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.