Skip to main content

கோவில் திருவிழாவில் தகராறு; இரண்டு பேருக்கு கத்திகுத்து - ஒருவர் பலி

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Two people were stabbed in a dispute during a dance at the festival

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்னஊணை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றுள்ளது‌. அப்போது அதேபகுதியைச் சேர்ந்த 23 வயதான புருஷோத்தமன் ஊர்வலத்தில் நண்பர்களோடு வந்துகொண்டு இருந்தார். இவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வருகிறார். புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் 28 வயதான நண்பர் தீபன் இருவரும் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து கரகத்தின் முன்பாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

 

இதில் அதே ஊர் புருசோத்தமனின் எதிர் வீட்டைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன்கள் பாலகணேசன், பாபு(எ) யோகானந்தன் ஆகியோர் தங்களது நண்பர்கள் ஸ்ரீநாத், முனுசாமி, சுமன் ஆகியோர்களோடு ஊர்வலம் வந்தனர். இந்த இரு குழுக்களும் நடனம் ஆடும் போது கால் மிதித்ததில் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் அருகே இருந்த வீட்டிற்கு சென்று கத்தி எடுத்து வந்து புருஷோத்தமன் மற்றும் தீபன் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் புருஷோத்தமன் என்பவரின் நெஞ்சுப் பகுதியில் ஆழமாக குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்துள்ளார்.  இந்நிலையை இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதித்து புருஷோத்தமன் வரும் வழியிலே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

 

தீபன் என்பவருக்கு இடது பக்க முதுகில் கத்தி குத்தியதால் படுகாயம் ஏற்பட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கத்தி குத்தில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில் இரவு முழுவது தீவிரமாக தேடி பாலகணேசன், பாபு, ஸ்ரீநாத், முனிசாமி ஆகிய 4 பேரை அணைக்கட்டு போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். மீதமுள்ள  ஒருவரை வேலூர் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சாதாரண வாய் தகராறால் கத்திக்குத்து நடந்து ஒருவர் பலியாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.