Skip to main content

சினிமாவை மிஞ்சிய கொலை; தலையை வெட்டி வீதியில் வீசிய கொடூரம் - பரபரப்பில் ஓசூர்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Two people lost their lives in the incident that overtook the cinema in Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் பரக்கத். இவருக்கு 31 வயதாகிறது. இவரின் நண்பர், ஓசூர் பழைய வசந்த நகரைச் சேர்ந்த பொன்வண்ணன் என்கின்ற சிவா. இவருக்கு 27 வயதாகிறது. நண்பர்களான இருவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற 'பக்கா' பிரகாஷ் என்பவரோடு நட்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த மூவரின் மீதும் ஓசூர் நகர காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பக்கா பிரகாஷை போலீசார் தேடி வந்தனர். ஒரு வழியாக அவரைக் கைது செய்த போலீசார், சேலம் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் 6 மாத காலமாகத் தண்டனை அனுபவித்து வந்த பிரகாஷ், கடந்த 19 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 6 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு ஜாமீனில் வெளிவரும் தங்களின் நண்பனை அழைத்து வருவதற்காக, பரக்கத் மற்றும் சிவா இருவரும் காரில் சேலம் சிறைச் சாலைக்குச் சென்றுள்ளனர். அப்போது சிறையிலிருந்து வெளியில் வந்த பக்கா என்ற பிரகாஷை அழைத்துக்கொண்டு ஓசூருக்கு மகிழ்ச்சியாக வந்துள்ளனர். 

இது ஒருபுறமிருக்க, சிறையிலிருந்து வெளியில் வரும் பிரகாஷிற்கு ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணமாக அவரைத் தீர்த்துக்கட்ட ஒரு குழு தீட்டம் தீட்டிக் காத்திருந்துள்ளது. இதற்கிடையில், சேலத்திலிருந்து காரில் வந்த மூன்று பேரும், பக்கா பிரகாஷ் வீடு இருக்கின்ற பார்வதி நகருக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே இவர்கள் மூவரும் வருவதை அறிந்து காத்திருந்த 15 பேருக்கும் மேற்பட்ட மர்ம கும்பல், அவர்கள் செல்லும் வழி அனைத்தையும் ரகசியமாக கண்காணித்துள்ளது. அதே சமயத்தில், நள்ளிரவு நேரத்தில் பிரகாஷை விடுவதற்காகச் சென்ற இருவரும், அங்கு சிறிது நேரம் நின்று பேசிவிட்டு, அதன் பின்னர், பிரகாஷை வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். பிரகாஷ் வீட்டிலிருந்து சிறிது தூரம் தெருவில் நடந்து சென்றபோது, சுமார் 15க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் திடுதிடுவென வந்துள்ளது. 

அப்போது, அந்தக் கும்பலைப் பார்த்து யாரென சுதாரிப்பதற்குள் அவர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, மர்ம கும்பல் வைத்திருந்த ஆயுதத்தால் சிவாவை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். படுகாயங்களோடு நிலைகுலைந்து கீழே விழுந்த சிவாவின் தலையைத் துண்டித்து அதனை வீதியில் வீசியுள்ளனர். இதற்கிடையில், தன்னை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற தனது நண்பர்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கப்படுவதைக் கண்ட பிரகாஷ், வீட்டிலிருந்து சுவர் ஏறிக் குதித்து தப்பித்துள்ளார். ஆனால், அதே சமயத்தில் சிவாவோடு இருந்த பரக்கத் அங்கிருந்து தப்பித்து, பிரகாஷ் வீட்டிற்குள் ஓடி, கதவினை தாழ்ப்பாள் போட்டு மூடியுள்ளார்.

ஆனாலும், அவரை விடாமல் துரத்திச் சென்ற மர்ம கும்பல், பிரகாஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது. அங்கு பரக்கத் மட்டும் இருப்பதைப் பார்த்த மர்ம கும்பல், உள்ளே நுழைந்து அவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனால் நிலைகுலைந்து விழுந்த பரக்கத் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 

இதனையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. இந்நிலையில், அந்தக் கும்பலிடம் இருந்து உயிர் தப்பித்த பக்கா பிரகாஷ், காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த அனைத்தையும் கூறி தனக்குப் பாதுகாப்பு கேட்டுள்ளார். அதன் பின்னர், இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து, ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் ஓசூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் பரக்கத் மற்றும் பொன்வண்ணன் என்கிற சிவா ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி பிரதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர், கொலை செய்தவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எதற்காக கொலை நடந்தது? எனப் பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ஓசூரில் நடந்த இரட்டைக் கொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.