திருச்சியில் லஞ்சம் பெற்ற இருவர் கைது!

try-dvac-case

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்குச் சொந்தமான சுமார் 31 செண்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததற்கும், புலப்படம் (FMB) கிடைக்க ஆவண செய்வதற்கும், திருச்சி துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்குரிய உரிமம் பெற்ற நில அளவர் ராஜா (தந்தை பெயர் : பெரியண்ணன்) என்பவரை அணுகியுள்ளார். அப்போது கடந்த 10.07.2025 ஆம் தேதி ராஜா ரூ.5,000 கையூட்டு கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று (11.07.2025) முருகேசன் திருசசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்குரிய உரிமம் பெற்ற நில அளவர் ராஜா லஞ்சம் பணம் ரூ.5,000த்தை முருகேசனிடமிருந்து பெற்று வைத்திருந்த போது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். இது தொடர்பாகத் திருச்சி, துறையூர் வட்டம் குறுவட்ட அளவர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

அதே போன்று திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், சுபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி ராபியா என்கிற ராபியதுல் பஸ்ரியா என்பவர் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு விமன் விகாரில் (VIMAN VIHAR) மனை எண் 4ஐ தனது கணவர் பெயரில் வாங்கி அதை சாத்தனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாகத் தனிப்பட்டா வேண்டி திருச்சி கிழக்கு வட்டம் அலுவலகத்தில் நில அளவை உதவி ஆய்வாளர் தையல் நாயகி என்பவரைக் கடந்த 10.07.2025ஆம் தேதி ராபியா சந்தித்துள்ளார். அப்போது ரூ.13,000 கையூட்டு கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று ராபியா திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பீட்டர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது திருச்சி, கிழக்கு வட்டம் அலுவலக நில அளவை சார் ஆய்வாளர் தையல் நாயகி என்பவர் லஞ்சப்பணம் ரூ.13,000த்தை ராபியாவிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். இது தொடர்பாகத் திருச்சி கிழக்கு வட்ட அலுவலகத்தின் நில அளவை பிரிவில் விசாரணை நடைபெற்று வருகிறது.

arrested Bribe DVAC trichy
இதையும் படியுங்கள்
Subscribe