Skip to main content

பழுதான சிலிண்டரை சீர்செய்யும்போது தீ விபத்து.. இருவர் பலி..!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

Two passes away in cylinder fire accident

 

தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் நகரின் என்.ஜி.ஒ. காலனி அருகே ஒரு தனியார் கேஸ் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. அதன் குடோன் சங்குபட்டி சாலையில் உள்ளது. அதன் மேலாளரான வைகுண்டம் (70) என்பவர் சிலிண்டர்கள் வைக்கிற குடோன் அருகே சிறிய அறையில் சமையல் செய்து கொண்டு கம்பெனி வேலையைக் கவனித்து வருபவர்.

 

அந்தக் கம்பெனியில் தாழையூத்து நகரின் காளி (36) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். சுரண்டை நகரின் வீரணாபுரத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் சிலிண்டர் சப்ளையராக வேலை பார்ப்பவர்.

 

இந்த நிலையில், கடந்த 23ம் தேதியன்று கம்மாப்பட்டி பகுதியின் கஸ்டமர் மாரியம்மாள் என்பவருக்கு சப்ளை செய்த சிலிண்டரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக அங்த சிலிண்டர் கொண்டு வரப்பட்டு அதனை மூன்று பேர்களும் குடோன் பக்கமுள்ள அறையில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தசமயம், வைகுண்டம் தங்கியிருந்த அறையில் சமையல் பணியும் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில் சிலிண்டரை சரி செய்யும் போது வெளியான கேஸ் சமையலறையிலும் பரவியதால் திடீரென தீப்பற்றிக்கொண்டது. அதில் சிக்கிய மூன்று பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் அருகிலுள்ளவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

இதில் சிகிச்சை பலனின்றி வைகுண்டம், காளி இருவரும் நேற்று காலை உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்பு அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தனியாக உள்ள அறையில் வைத்து சிலிண்டரை சீர் செய்ததால், அருகிலுள்ள சிலிண்டர் குடோன் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.