
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (01.06.2025) தொடங்கியுள்ளது. பொதுக்குழு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் உள்ள அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் மேடையில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் மூர்த்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோரும் மேடையில் உள்ளனர்.
முன்னதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து, போப், சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
திமுகவில் கல்வியாளர்கள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு சார்பு அணிகள் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்புதலை பொதுக்குழு அளித்துள்ளது. இந்த பொதுக்குழுவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை திமுக மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கொண்ட கல்வியாளர் அணியும், அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, சட்ட வழக்கறிஞர் அணி என திமுகவில் 23 சார்பு அணிகள் இருக்கிறது. புதிதாக கல்வியாளர் அணி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி கொண்டுவரப்பட்டுள்ளதால் திமுகவில் இருக்கும் சார்பு அணிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்து இருக்கிறது