‘புரெவி’ புயல் காரணமாக தொடரும் கனமழையை அடுத்து புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர்த் தேங்கியுள்ளது. இதனால், பாலங்களில் மழை நீர் நிரம்பி செல்கிறது.
கனமழையால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. மழையோடு மழையாக, மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டும் வருகிறது. ஆனால், பல இடங்களில் மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமல், மின் தடையும் ஏற்பட்டுள்ளது. நெடுவாசல் மின்பாதையில், மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மின்வாரிய அதிகாரி செல்லக்கணபதி தலைமையில், கொட்டும் மழையில் சென்ற மின்வாரிய ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் மின்கம்பம் நட்டு, மின் இணைப்பு கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த துயரச் சம்பவங்கள் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆலங்குடி டி.வி.எஸ் தெரு வெங்கடேசன் மகள் சுவேதா (13), இன்று காலை தனது வீட்டு மாடி ஓரத்தில் தாழ்வாகச் சென்ற மின்கம்பிகள், சுவேதா மேல்பட்டு கீழே தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
அதேபோல், ஆலங்குடி அருகில் உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம் மகள் அஞ்சலி (16). ஆலங்குடி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 12 -ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி சரிந்துள்ளார். உடனே ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அஞ்சலி உயிரிழந்துள்ளார். ஆலங்குடியில் ஒரே நாளில் அடுத்ததடுத்து 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி, இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.