
புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருகில் உள்ளது வடக்கு தொண்டைமான் ஊரணி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் துரைராசு (60), சாமியய்யா மகன் அழகர்சாமி (50), ராஜாபகதூர் கிராமம் நடேசன் மகன் சுந்தரம் (65) ஆகிய மூவரும் இணைபிரியாத நண்பர்கள்.
கடைசியாக கடந்த 15 நட்களுக்கு முன்பு மூவரும் இணைந்து சாராயம் அருந்தியுள்ளனர். அன்று இரவில் இருந்து மூவருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வீட்டிலேயே கசாயம் குடித்தவர்கள், உடல்நிலை மேலும் மோசமான நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, துரைராசு மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 27ஆம் தேதி அழகர்சாமிக்கும் உடல்நிலை மோசமான நிலையில் கரோனா பரிசோதனை செய்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற நிலையில், 29ஆம் தேதி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு உடையணிந்தவர்கள் மட்டும் வந்து உடலை அடக்கம் செய்தனர்.
இதில் மூன்றாவது நண்பரான சுந்தரமும் காயச்சல், தலைவலி, இருமலோடு வீட்டில் அவதிப்பட்டதால் அவரது உறவினர்கள் இன்று (31.05.2021) சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இணைபிரியாத நண்பர்களைக் கரோனா தொற்று இணைபிரிக்காமலேயே உயிர்பலி வாங்கியதால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து புதுக்கோட்டை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி கவனத்திற்கு கொண்டு சென்றோம். உடனே மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், கரோனா பரிசோதனைகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.