Skip to main content

இணைபிரியா நண்பர்கள் விபத்தில் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Two friends passes away in accident near thittakudi


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செங்கமேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரவீன், வயது 15 அதே ஊரைச் சேர்ந்தவர் இங்கர்சால். இவரது மகன் சூர்யா, வயது 15. இவர்கள் இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்கள். இருவரும் இணைபிரியாத நண்பர்கள். இந்த நிலையில், நேற்று (22.02.2021) சூர்யாவுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதனை அவர்கள், தங்கள் ஊரில் நண்பர்களுடன் கொண்டாடி உள்ளனர். இதற்காக பெண்ணாடத்தைச் சேர்ந்த சூர்யாவின் நண்பர் ஒருவர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக செங்கமேடு வந்துள்ளார். 

 

பிறந்தநாள் நிகழ்ச்சியை நண்பர்களுடன் முடித்துகொண்டு, பெண்ணாடத்தில் இருந்து வந்திருந்த நண்பரை பெண்ணாடம் வரை கொண்டு சென்று விட்டுவிட்டு சூர்யாவும் பிரவீனும் மீண்டும் தங்கள் ஊரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, கூடலூர் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியது. அதில் பிரவீன், சூர்யா இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில், சூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். 

 

சிகிச்சை பலனின்றி சிலமணி நேரங்களிலேயே பிரவீன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யாவின் உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இரு மாணவர்களின் உடல்களையும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சாலை விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த ஆவினங்குடி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

ஒரே ஊரைச் சேர்ந்த இரு மாணவர்கள் விபத்தில் மரணமடைந்த சம்பவம் செங்கமேடு கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன மாணவர்கள் உடலைப் பார்த்து அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுத காட்சி பார்ப்போரைக் கண்கலங்க வைத்தது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.