Skip to main content

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் மாயம்!  ஒருவர் உடல் மீட்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Two fishermen missing one passes away

சிதம்பரம் அருகே சின்ன வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் செல்வம்(48), தயாளமூர்த்தி(55) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மாலை முடசல்ஓடை முகத்துவாரம் வழியாக வங்காளவிரிகுடா கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீன் பிடித்துக் கொண்டு இரவு கரைக்கு திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக முடசல்ஓடை முகத்துவார பகுதியில் அலையில் சிக்கிய படகு கவிழ்ந்துள்ளது. இதில், இருவரும் காணாமல் போயுள்ளனர்.  

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரம் மீனவர் செல்வம் உடல் கரை ஒதுங்கியது. இதனை காலையில் பார்த்த உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள், பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்து அழுதனர். மீனவர் தயாளமூர்த்தி உடல் கிடைக்கவில்லை. இவரது உடலை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படை, வனத்துறை, காவல்துறையினர் உதவியுடன் தேடி வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Two fishermen missing one passes away
செல்வம், தயாளமூர்த்தி

இதகுறித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள், “சின்னவாய்க்கால் முகத்துவாரம் தூர்ந்து விட்டதால் 7 கிமீ தொலைவில் உள்ள பரங்கிப்பேட்டை அருகே முடசல்ஓடை முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குச் செல்கிறார்கள். இங்கு முகத்துவாரம் தூர்ந்துள்ளதால் படகு வரும்போது தரைதட்டி அலையில் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே முடசல் ஓடை முகத்துவாரத்தை 6 மாதத்திற்கு ஒரு முறை தூர்வார வேண்டும். அதேபோல் சின்ன வாய்க்கால் முகத்துவாரத்தையும் தூர்வாரி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறுகின்றனர்.

கடந்த 12-ந் தேதி  இந்தப் பகுதியில் மீனவர் சுரேந்திரன் (28) என்பவர் இதேபோல் உயிரிழந்தார். அவர் இறந்து 8 வது நாளில் 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவீந்திரன், “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பரங்கிப்பேட்டை மீன் இறங்கு தளம் ரூ 36 கோடி,  சின்ன வாய்க்கால் மீன் இறங்குதளம்  மற்றும் தூர்வாரும் பணிக்கு 32 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது கட்டிடம் கட்டும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தொடர்ந்து விபத்து நடைபெறுவதால் முதலில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஒப்பந்ததாரர் உடனடியாகத் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்