ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி!

Two drowned in Attur Kamaraj Reservoir

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பூஞ்சோலையைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் செல்வகுமார். இவரது அண்ணன் வேல்முருகன் பெரியகுளத்தில் வசித்து வருகிறார். வேல்முருகனின்மகள் தர்ஷினி பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆத்தூரில் நடந்த திருவிழாவிற்காக கடந்த வாரம் வந்த தர்ஷினி சித்தப்பா செல்வகுமார் வீட்டில் தங்கியிருந்துள்ளார். வேல்முருகன் மகளை அழைத்துச் செல்வதற்காக ஆத்தூர் வந்துள்ளார்.

அப்போது செல்வகுமார் வேலைபார்க்கும்முதலாளியின்குடும்பத்தினர் திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூர் வந்துள்ளனர். உறவினர்கள் மற்றும் தனது முதலாளி குடும்பத்தினர் ஆத்தூருக்கு வந்ததை அடுத்து அருகில் உள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்துவிட்டு வரலாம் என எல்லோரும் கிளம்பி உள்ளனர். காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வந்த அவர்கள் அணையின் உள்ளே இறங்கி குளித்துக் கொண்டு இருந்தபோது செல்வகுமாரின் முதலாளியின் மனைவி தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற செல்வக்குமாரை தண்ணீருக்குள் தள்ளிவிட்டு முதலாளியின் மனைவி வெளியே வந்துள்ளார். செல்வக்குமார் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த அண்ணன் மகள் தர்ஷினி சித்தப்பாவை காப்பாற்றுவதற்காக சென்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

இறந்துபோனவர்களின் உடலைத் தேடுவதற்காக ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை தேடினார்கள். இரண்டு மணி நேரம் அணைக்கட்டில் தேடிய போது இறந்துபோன செல்வகுமாரின் உடலை முதலில் கைப்பற்றி தரைப்பகுதிக்கு கொண்டுவந்தனர். அதன்பின்னர் அரை மணி நேரம் கழித்து அண்ணன் மகள் தர்ஷினியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அணைக்கு குளிக்க வந்தஇருவர் இறந்து போன சம்பவம் ஆத்தூர் பூஞ்சோலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக காமராஜர் நீர்த்தேக்க பகுதிக்குச் சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட துணையாக இருக்க வேண்டும் என கூறியதையடுத்து ஆத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜம்ருத் பேகம், ஹக்கீம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க பகுதிக்குச் சென்று தீயணைப்புத் துறையினருக்கு உதவியாக செயல்பட்டனர். கடந்த இரண்டு வருடத்தில் இதுபோல் 9 பேர் உயிரிழந்த நிலையில் இதற்குமாநகராட்சியின் மெத்தனமே காரணம் என குற்றச்சாட்டும்எழுந்துள்ளது.

pool
இதையும் படியுங்கள்
Subscribe