Skip to main content

சேலத்தில் கள்ள லாட்டரி விற்பனையாளர்கள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

Two counterfeit lottery sellers in Salem

 

சேலத்தில் கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய நண்பரான சேலம் சீலநாயக்கன்பட்டி கே.ஆர்.நகரைச் சேர்ந்த சதீஸ் என்கிற சதீஸ்குமார் (42) கள்ளச் சந்தையில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்தார்.

 

கடந்த பிப். 23 ஆம் தேதி, கோவிந்தராஜிடம் ஒரு வெள்ளைத்தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் என்று கூறி சில எண்களை எழுதிக் கொடுத்துள்ளார் சதீஸ்குமார். அந்த எண்களுக்குப் பரிசு விழும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.

 

அப்போது அங்கு வந்த வேறு இருவர், தங்களுக்கு குறித்துக் கொடுத்த எண்களுக்குப் பரிசுத்தொகை விழவில்லை என்று கூறி, சதீஸ்குமாரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார் கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சதீஸ்குமாரை, அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

விசாரணையில், கடந்த 12 ஆண்டுகளில் இதுபோல லாட்டரியில் அதிக பரிசுத்தொகை கிடைக்கும் என்று கூறி பலரை மோசடி செய்திருப்பதும், இது தொடர்பாக அவர் மீது அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் மட்டும் 25 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

 

Two counterfeit lottery sellers in Salem

 

இந்த வழக்குகளில் பலமுறை அவர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்த பிறகு, மீண்டும் மீண்டும் பலரையும் லாட்டரி வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதையே தொழிலாக இருந்து வந்துள்ளார்.

 

இவரைப் போலவே, சேலம் மாவட்டம் ஓமலூர் தேக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் கருப்பூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், ஒரு துண்டு தாளில் சில எண்களைக் குறிப்பிட்டு, அது லாட்டரி சீட்டுகளின் எண்கள் என்றும், கட்டாயம் பரிசு விழும் என்று கூறியும் பணம் பறித்துள்ளார்.

 

ஆனால் சொன்னபடி அந்த எண்களுக்குப் பரிசு விழாததால் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் ராஜேந்திரன். அப்போது அவரை மாரியப்பன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாரியப்பன், தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் கருப்பூர் காவல் நிலையத்தில் 14 லாட்டரி மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

தொடர்ந்து பொய் வாக்குறுதிகள் மூலம் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஸ்குமார், மாரியப்பன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் சந்திரசேகரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார், மார்ச் 8 ஆம் தேதி உத்தரவிட்டார். இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான கைது ஆணை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேரில் வழங்கப்பட்டது.

 

இவர்களில் சதீஸ்குமார் ஏற்கனவே 2014, 2016, 2018 ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 4வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.