Skip to main content

குடும்பத் தகராறு! பரிதாபமாக பலியான இரு குழந்தைகள்! 

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Two child passes away police investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் உள்ள பீலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(29). ஆட்டோ டிரைவரான இவருக்கும் தியாகதுருகம் அருகே உள்ள வட தெரசாசாலூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா(23) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் யாழினி என்ற மகளும், ஒரு வயதில் சாஜித் என்ற மகனும் இருந்தனர்.

தேவேந்திரன் - சரண்யா இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு குடும்பத்திற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்பது குறித்து பேசும்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. இதனால் கணவர் மீது கோபித்துக் கொண்ட சரண்யா, நேற்று முன்தினம் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்பொழுது சரண்யாவின் பெற்றோர் கடைக்கு சென்றுவிட்டதால், அவரது பாட்டின் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரும், சரண்யா வந்ததும், அவர் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். பிறகு பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது சரண்யாவையும் குழந்தைகளையும் காணவில்லை. பயந்துபோன சரண்யாவின் பாட்டி அவர்களை குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால், யாரும் சரண்யாவையும் அவரின் குழந்தைகளையும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர். 

பிறகு உறவினர்களுடன் சேர்ந்து சரண்யாவின் பாட்டி அவர்கள் மூவரையும் தேடியுள்ளார். அப்போது ஏரிக்கரை அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த கிணற்றுக்கு வெளியே சரண்யாவின் துப்பட்டா கிடந்துள்ளது. இதை பார்த்து திடுக்கிட்ட ஊர் மக்கள் சரண்யா குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருதினர். இது குறித்து உடனடியாக தியாகத்திற்கும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்து அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு 80 அடி ஆழம் உள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை முழுமையாக மின் மோட்டார் உதவியுடன் வெளியேற்றினர். அப்போது சரண்யாவின் இரு குழந்தைகளும் சடலமாக கிடந்தனர். ஆனால், சரண்யா அங்கு இல்லை. 

உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரண்யாவை தேடினர். அப்போது வட தெரசாலூர் அருகே உள்ள ஏரி பகுதியில் சரண்யா மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு அவரிடம் விசாரித்த போது கணவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனம் வெறுத்து தற்கொலை முடிவு எடுத்ததாகவும், முதலில் குழந்தைகள் இருவரையும் தூக்கி வீசியதாகவும் பிறகு அவர் கிணற்றில் குதித்ததாகவும் சொல்லியுள்ளார். மேலும், தனக்கு நீச்சல் தெரிந்ததால், மேலே வந்துவிட்டதாகவும், பிறகு, வட தெரசாலூர் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக ஏறியதாகவும் அப்போது ஏற்பட்ட மயக்கத்தில் அங்கிருந்து கீழே விழுந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

உடனடியாக சரண்யாவை மீட்ட போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, அங்கு அவருக்கு சிகிச்சையில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடதரசாலூர் கிராம நிர்வாக அலுவலர் சலீம் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கமலஹாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.