Skip to main content

தனியாக குளிக்கச் சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி... சோகத்தில் கிராமம்...

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
two boys passes away ;village people shocked

 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது கொடுங்கால் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் 12 வயது தினேஷ்குமார், பத்து வயது அஸ்வின்குமார். இவர்கள் முறையே ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள குளத்தில் குளிப்பதற்காகத் தனியே சென்றுள்ளனர்.

 

அப்படிச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர்கள் பல்வேறு இடங்களில் இரு பிள்ளைகளையும் தேடியுள்ளனர். இந்த நிலையில் தினேஷ்குமார், அஷ்வின் குமார் இருவரும் ஊர்குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்துள்ளனர். இதைப் பார்த்த ஊர்மக்கள் திரண்டு சென்று இரு சிறுவர்களின் உடல்களையும் குளத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கொடுங்கால் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.