Skip to main content

சேலத்தில் மான் இறைச்சி விற்க முயன்ற இருவர் கைது! கார், ஸ்கூட்டர் பறிமுதல்!!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

சேலத்தில் மான் இறைச்சியுடன் சுற்றிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாநகர காவல்துறையினர் கோரிமேடு பகுதியில் ஜூலை 25ம் தேதி மாலை, வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஓர் இன்னோவா கார் வந்தது. அதைப் பின்தொடர்ந்து பதிவு எண் இல்லாத ஜூபிடர் ஸ்கூட்டரில் ஒரு வாலிபரும் வந்து கொண்டிருந்தார். அவ்விரு வாகனத்தில் வந்தவர்களையும் காவல்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறினர்.

 

 Two arrested for trying to sell deer meat in Salem Car, scooter confiscated !!


அந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் ஒரு பாலிதீன் பையில் பச்சைக்கறி மற்றும் ஒரு விலங்கின் நான்கு கால்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவை மான் இறைச்சி மற்றும் கால்கள் என்பது தெரிய வந்தது. ஸ்கூட்டர் வாகனத்தை ஓட்டி வந்தவர், சேலம் அய்யந்திருமாளிகையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் லோகநாதன் (25) என்பதும் தெரிய வந்தது.  இன்னோவா காரின் பின்பக்க இருக்கை அருகே ஒரு பாலிதீன் பையிலும் அவர்கள் மான் இறைச்சியை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் ஓமலூர் மூங்கில்பாடியைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் லட்சுமணன் (30) என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கு வனத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சேலம் சரக வனத்துறை வசம் ஒப்படைத்தனர். 

 

 Two arrested for trying to sell deer meat in Salem Car, scooter confiscated !!


மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு 72 மணி நேரத்திற்கு மேல் ஆனதால், துர்நாற்றம் வீசியது. அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக துர்நாற்றம் வீசாமல் இருக்க, வனத்துறையினர் இறைச்சி மீது ஃபினாயில் தெளித்து வைத்திருந்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் (டிஎப்ஓ) பெரியசாமி கூறுகையில், ''பிடிபட்ட லோகநாதன் தனது ஸ்கூட்டர் வாகனத்தை அயோத்தியாப்பட்டணம் பகுதியில் நிறுத்திவிட்டு லட்சுமணனுடன் ஒன்றாக ஒரே காரில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்யப்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.

 

 Two arrested for trying to sell deer meat in Salem Car, scooter confiscated !!

 

அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு பேரிடம் இருந்து மான் இறைச்சியை விலைக்கு வாங்கி சேலத்திற்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இருவரிடம் இருந்து 14 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க சேர்வராயன் தெற்கு சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களிடம் மான் இறைச்சி விற்றவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வன விலங்குகள் சட்டம் 1972ன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.