திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.எஸ். கார்டனில் கடந்த 24.04.22-ம் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்கு வாட்ச்மேனின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும், மண்வெட்டியால் தாக்கியும், வாட்ச்மேன் மனைவி அணிந்திருந்த 4 கிராம் எடையுள்ள தோடுகள், பணம் ரூ.10,000 மற்றும் செல்போனை கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை வழக்கில் மகேஸ்வரன்(27), அஜித்குமார்(23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் விசாரணையில், மகேஸ்வரன் மீது கத்தியை காட்டி பணம் பறித்ததாக 6 வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், அஜித்குமார் மீது முன்விரோதத்தால் ஆட்டோவை அடித்து நொறுக்கியும், அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கு உட்பட 10 வழக்குகளும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மகேஸ்வரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் உடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டுள்ளார்.