Skip to main content

கடலூரில் நூதன முறையில் கார் திருடிய இருவர் கைது !!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

Two arrested for stealing car in Cuddalore

 

கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்துள்ள ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் ரவி(47). இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் ரவியிடம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கார்கூடலைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் மணிகண்டன் (எ) கதிரேசன்(23), புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டுமென்று வாடகைக்குப் பேசி ரவியை அழைத்துச் சென்றார். கடலூர் அருகே சென்றபோது இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் இரண்டு பேரும் சாப்பிட்டனர்.

 

பின்னர் மணிகண்டன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். ரவி மட்டும் தாமதமாக சாப்பிட்டார். இதனால் தான் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் ரவிக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்துவிட்டு, “நான் காரில் காத்திருக்கிறேன், அதனால் உனது கார் சாவியையும், யூடியூப் பார்க்க உனது செல்ஃபோனையும் கொடு” என்று பேசி வாங்கினார். இதை நம்பிய ரவி, மணிகண்டனிடம் சாவியையும் செல்ஃபோனையும் கொடுத்து அனுப்பினார். பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தபோது காரையும் அவரையும் காணவில்லை. அதன் பிறகுதான் அவர் தனது காரை திருடிச் சென்றது தெரியவந்தது. 

 

இதனால் அதிர்ச்சியடைந்த ரவி, இதுபற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மேற்பார்வையில் திருப்பாப்புலியூர் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். 

 

Two arrested for stealing car in Cuddalore

 

இந்த நிலையில் மணிகண்டன் காருடன் நேற்று (08.02.2021) மதியம் சேத்தியாத்தோப்பு பகுதியில் வலம் வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது அவருடன் அவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெருமாத்தூர் காமராஜ் என்பவரின் மகன் அஜித்குமார்(24) என்பவரும் உடன் இருந்துள்ளார். அதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து திட்டமிட்டுக் காரைத் திருடியது தெரியவந்தது. அதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த காரையும் பறிமுதல் செய்தனர். 

 

இவர்கள் 2 பேர் மீதும் பரங்கிப்பேட்டை, குன்னம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நூதன முறையில் கார் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.