Skip to main content

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி... இருவர் கைது..!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Two arrested for fraudulently Rs 9.17 lakh to work abroad

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (58). இவர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "2015ஆம் ஆண்டு பண்ருட்டியில் ஸ்வீட் கடை நடத்தி வந்தபோது, கடலூரைச் சேர்ந்த அன்வர் பாட்ஷா என்பவருடன் அறிமுகம் கிடைத்தது. அப்போது, அன்வர் பாட்ஷா, கோண்டூரைச் சேர்ந்த முனிராபேகம் மற்றும் அவரது கணவர் முகம்மது அஜ்மல்கான் உள்ளிட்டோர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறினர். 


அதன்பேரில் நானும், எனது நண்பர்களான பண்ருட்டி அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ்(50), மாளிகைமேடு குமார்(40) ஆகியோர் முனிராபேகத்தைச் சந்தித்தோம். அவர், லண்டனில் உள்ள தனது கணவர் முகமது அஜ்மல்கான் மூலமாக அந்நாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறினார்.


அதனை நம்பி முனிராபேகம், வெளிநாட்டில் இருந்து திரும்பிய முகமது அஜ்மல் கான், அன்வர்பாட்ஷா ஆகியோரிடம் பல தவணைகளாக ரூ.9 லட்சத்து 17 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தினர். பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"  எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முனிராபேகம், முகம்மது அஜ்மல்கான், அன்வர் பாஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 

இந்நிலையில், மற்றொரு பணமோசடி வழக்கில் கைதாகி கடலூர் பெண்கள் சிறையில் இருந்த முனிராபேகத்தை கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் துர்கா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கோண்டூர் வீட்டில் பதுங்கியிருந்த அன்வர் பாட்ஷாவையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முகம்மது அஜ்மல் கானை தேடி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.