
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் பேஸ்புக் இன்பாக்ஸ்க்கு பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரம் வந்துள்ளது. அதனை நம்பி அந்த இளைஞர் அந்த விளம்பர மெசேஜ்ஜில் குறிப்பிடப்பட்டிருந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசிய நபர்கள் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ஒரு லிங்க் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் வந்த இணையதள பக்கத்தில் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஒரு சில மாதங்கள் ஆகியும் முதலீட்டிற்கான லாபம் எதுவும் வரவில்லை. உடனே அந்த இளைஞர், தன்னிடம் பேசிய நபர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, இன்னும் கூடுதலாக பணத்தை கட்டினால் தான் முதலீடு மற்றும் அதற்கான லாப பணத்தை எடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்து லட்சக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வற்புறுத்திள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அவர், தான் மோசடி செய்யப்பட்டதையறிந்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலைக்கார தெருவை சேர்ந்த திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் 30 வயதான ஜமாலுதீன், அவரது நண்பர் 29 வயதான கிங்ஸ்டன் ஆகியோர் இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஜமாலுதீன் மற்றும் கிங்ஸ்டன் ஆகிய இருவரையும் கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி