தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பன்ருட்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது காவல்துறை நடத்திய படுகொலையாகும். ஒரே மாதிரியான குற்றத்திற்கு, பொதுமக்களுக்கு ஒரு தண்டனையும், காவல்துறைக்கு ஒரு தண்டனையும் வழங்கப்படுவதனால் தான், இதுபோன்ற மனித நேயமற்ற கொடூரச் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் கை, கால்களை உடைத்துவிட்டு ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டனர்’ என்ற காவல்துறையின் கதைகளும், அதை அங்கீகரிக்கும் நீதித்துறையின் செயலுமே, காவல்துறையின் மரணங்களுக்கு அடித்தளமாக உள்ளது. இந்தியாவில் 90 விழுக்காடு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது காவல்துறையினரே. அத்துறையிடம் அதிகாரம் குவிக்கப்படுவதன் விளைவைத்தான், காவல்துறை மரணங்கள் அரங்கேறி வருகிறது. மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர். வரம்பு மீறிய அதிகாரத்தால், தாங்கள் மக்களுக்கு பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்ல என்ற அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம். 

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்திருப்பது கடும் கண்டத்துக்குரியது. எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.