
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பு காரணமாக காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரத்தினம் பிள்ளை (96) என்பவர் ஆரம்ப காலத்தில் மருத்துவர் ஆனதில் இருந்து அந்த பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனால், அவர் பத்து ரூபாய் டாக்டர் என பெயர் பெற்றார்.
பல ஆண்டுகளாக பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த ரத்தினம் சுமார் 65 ஆயிரம் சுகப்பிரசவரங்களை பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று (07-06-250 வயது மூப்பு காரணமாக மருத்துவர் ரத்தினம் காலமானார். அவரது மறைவு அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்து ரூபாய் மருத்துவர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட தஞ்சை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த போற்றுதலுக்குரிய மருத்துவர் ரத்தினம் ஐயா காலமானார் என்ற செய்தி பெரும் வேதனை அளிக்கிறது. தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ சவையாற்றியிருகிறார். குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்களுக்கு பல ஆயிரங்களை கட்டணமாக வசூலித்து வரும் நிலையில், இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் தாய்மார்களுக்கு வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் தனக்கு சொந்தமான கட்டிடத்திற்கு வாடகையே பெற்றுக்கொள்ளாமல், பல லட்சங்களை விட்டுக் கொடுத்திருக்கிறார் ரத்தினம் ஐயா. அவரது மறைவு என்பது தமிழ்ச் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும். மருத்துவர் ரத்தினம் ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஐயாவின் மறைவிற்கு இரங்கலைக் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.