Skip to main content

10 ஆண்டுகளாக அடைபட்டிருந்த தொலைக்காட்சி பெட்டிகளும், மூடப்பட்டிருந்த சமுதாய நலக்கூடமும்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

TV sets that had been stuffed for 10 years and a closed social welfare center!

 

கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 'குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும்' என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

 

அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு செம்மண்டலம் குண்டு சாலையில் உள்ள பல்நோக்கு சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அப்போது 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக அந்த 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

 

2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011 முதல் 2016 வரையிலும், 2016 முதல் 2021 ஆண்டு வரையிலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது. இதனால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாகச் சமுதாய நலக் கூடத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், "சமுதாய நலக்கூடத்தினை திறந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை விடுபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பூட்டியே கிடக்கும் சமுதாய நலக்கூடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்" என்று கோரிக்கைகள் எழுந்தன.

 

TV sets that had been stuffed for 10 years and a closed social welfare center!

 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் சமுதாய நலக் கூடத்தில் இருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. அதில் நல்ல நிலையில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை அரசு அலுவலகங்கள் போன்ற பிற பயன்பாட்டிற்கும் பழுதடைந்தவற்றைச் சரிசெய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று வட்டாட்சியர் பலராமன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடலூர் செம்மண்டலம் சமுதாய நலக் கூடத்திலிருந்த 3,139 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஊழியர்கள்  வாகனங்கள் மூலம் ஏற்றி கடலூர் டவுன்ஹாலில் உள்ள சிறிய அறைக்கு மாற்றினர். பழுதடைந்த தொலைக்காட்சிகளை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து சமுதாய நலக் கூடத்தினை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி இருந்ததால் அந்த கட்டடம் தற்போது பழுதாகி உள்ளது. சமுதாய நலக் கூடத்தில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைந்து காணப்படுகின்றன. அதைச் சுற்றிலும் முள் செடிகள், கொடிகள் படர்ந்துள்ளன. இவைகளை அகற்றி, கட்டிடங்களைப் புதுப்பிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

 

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள ரெட்டியார்சத்திரம் கட்டிடம், கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  மாவட்டம் முழுவதும் 7,619 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் அனைத்தையும் சீர்செய்து விடுபட்ட நபர்களுக்கு வழங்கவும்,  அல்லது அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவைகளுக்கு உபயோகப்படுத்தவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.