Skip to main content

சீன் போட்ட சின்னப்பன்... கெத்து காட்டிய மார்க்கண்டேயன்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Tuticorin Vilathikulam DMK ADMK issue

 

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட விளாத்திகுளம் மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தி.மு.க.வில் சேர்ந்தபிறகு சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மார்க்கண்டேயன் விளாத்திகுளம் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

 

இந்த சூழ்நிலையில் எதிரணியில் அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ சின்னப்பன் மீண்டும் சீட்டுக்காக காய்நகர்த்தி வருகிறார். இதற்காக அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜூவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்றாலும், அமைச்சர், முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஒருவருக்கு சீட் தருவதற்கு கட்சித் தலைமையிடம் சிபாரிசு செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. தி.மு.க.வில் கிட்டத்தட்ட மார்க்கண்டேயனுக்குத்தான் சீட் என்பது உறுதியாகி விட்டது. அமைச்சரோ வேறு ஒருவருக்கு சிபாரிசு செய்கிறார். இதனால் கட்சித்தலைமையின் கவனத்தை ஈர்க்க திட்டம் தீட்டினார் சின்னப்பன். இதற்காக அ.தி.மு.க 49-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'மார்க்கண்டேயன் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு இப்போது எதிரணியில் இணைந்திருப்பதாக' சரமாரியாகத் திட்டித்தீர்த்தார்.

 

Tuticorin Vilathikulam DMK ADMK issue

 

இந்நிலையில்  விளாத்திகுளத்தில் 22ஆம் தேதி தி.மு.க கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் 3 நாட்களுக்கு முன்னரே அனுமதி வாங்கிவிட்டார் மார்க்கண்டேயன். அன்றைய தினமும் மார்க்கண்டேயன் மக்களை திரட்டி 'மாஸ்' காட்டிடுவார் என்பதை அறிந்த சின்னப்பன், நாங்களும் அதே நாளில் கொடியேற்றப்போகிறோம், அனுமதி தாருங்கள் என காவல்துறையிடம் மனு கொடுத்தார். நீங்கள் 'முதல்நாள் கொடியேற்றுங்கள் அல்லது அவர்கள் கொடியேற்றிய மறுநாள் ஏற்றிக்கொள்ளுங்கள்' எனக் கூறி, காவல்துறை அ.தி.மு.க சின்னப்பனுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

 

இதனால் பிரச்சனையைக் கிளப்பும் முடிவில் கட்சி நிர்வாகிகளை திரட்டிய சின்னப்பன் தலைமையிலான அ.தி.மு.கவினர், காவல்துறை வைத்திருந்த தடுப்புகளையும் மீறி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தடுக்க முயன்ற டி.எஸ்.பி கலைக்கதிரவனை கீழே தள்ளிவிட்டனர். இதில் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லத்தி சார்ஜ் நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் சின்னப்பன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினபு பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தார்.

 

Tuticorin Vilathikulam DMK ADMK issue


மார்க்கண்டேயனை எதிர்க்க சின்னப்பன் தான் சரியான ஆள் எனக் கட்சித் தலைமை நினைக்க வேண்டும் என முடிவு செய்து சின்னப்பன் செய்த செயல், அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. எம்.எல்.ஏ சின்னப்பன் தேவையில்லாமல் சின்னப்பிள்ளைத் தனமான வேலைசெய்து மார்க்கண்டேயனின் மார்க்கெட்டை ஏற்றிவிட்டுள்ளதாக புலம்புகின்றனர் ர.ரக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.