Skip to main content

சென்டிமெண்டாக ஏமாற்றிய மர்ம நபர்கள்; சிசிடிவியில் சிக்கிய காவிகள் 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

tuticorin sathankulam incident evidence in cctv camera 

 

பில்லி, சூனியம், தோஷம் போக்குதல் என்று சொல்லிக் கொண்டு பணத்திற்காக தனியே இருக்கும் பெண்களைக் குறி வைத்து மோசடிப் பேர்வழிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் நகர் பகுதியில் உலா வருவது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

 

சாத்தான்குளம் நகரின் மையப் பகுதியில் வசித்து வரும் ராமலிங்கம் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் ராமலிங்கம் வேலைக்கு சென்றிருந்தபோது அவரது மனைவி முத்து ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். பட்டப் பகல் நேரம். அப்போது காவி உடை அணிந்து வந்து மூன்று பேர் முத்து ஜோதியிடம் உங்கள் வீட்ல தோஷம் உள்ளது. அதைப் போக்கணும். அதனால 7 சாமியார்களை வர வச்சி அவர்கள் மூலமா தோஷத்தக் கழிச்சாத்தான் உங்களுக்கும் ஒங்க வீட்டுக்கும் நல்லது நடக்கும். குடும்பத்துக்கான ஆபத்தும் விலகும் என்று சொல்லியுள்ளனர். அதோடு 7 சாமியார்களுக்கும் 3 ஆயிரம் வீதம் மொத்தம் 21 ஆயிரம் செலவு ஆகும் என்று அவரிடம் தெரிவித்துள்ளனராம்.

 

இதைக் கேட்ட முத்து ஜோதி தோஷம் கழிக்க மறுத்திருக்கிறார். ஆனாலும் விடாத மர்ம காவி நபர்கள், உடனடியாக தோஷம் கழிக்கலைன்னா பெரிய ஆபத்தே ஏற்படும்னு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் மிரண்டு போன அப்பாவி முத்து ஜோதி 3 சாமியார்களை வரவழைத்து தோஷம் கழித்தால் போதும் என்று கூறி 9 ஆயிரத்தை மர்ம நபர்களிடம் வழங்கியுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டவர்கள், அருகில் உள்ள கடைக்குப் போய்ட்டு உடனே வந்து விடுவோம். உங்கள் கணவர் வீட்டிற்கு வந்தவுடன் பரிகாரத்தை ஆரம்பிச்சிடுவோம் என்று சொல்லி விட்டுச் சென்றுள்ளனராம்.

 

இந்த விவரங்களை தன் கணவரிடம் போனில் அவர் தெரிவிக்கவே, உடனே ராமலிங்கமும் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால் பரிகாரம் போக்குவதாக சொல்லி பணத்தை வாங்கிய 3 மர்ம காவி நபர்களும் திரும்பி வராமல் போன பிறகு தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பதறிய ராமலிங்கம், உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். எஸ்ஐ சுரேஷ்குமார் விசாரணை செய்திருக்கிறார். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் சாத்தான்குளம் நகர வர்த்தக சங்கம் சார்பில் பஜாரில் பொருத்தப்பட்டுள்ள வழியோர சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். தோஷம் கழிப்பதாக பணத்தை வாங்கிச் சென்ற 3 மர்ம காவி நபர்கள் பைக்கில் தப்பிச் செல்வது தெரிய வரவே அதனடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

அந்த நபர்கள் பற்றிய முக்கியமான நம்பர் கிடைத்துள்ளது. விரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம் என்று காவல் நிலைய போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் பெண்களின் இயல்பான மன பயமான சென்ட்டிமெண்ட்டைப் பயன்படுத்திக் கொண்டு பில்லி, சூனியம், தோஷம் கழிப்பதாக சொல்லிக் கொண்டு வீடுகளுக்கு வரும் மர்ம நபர்களிடம் பொது மக்கள் ஏமாற வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.