Skip to main content

பசுக்களுக்கு தங்க கொலுசு! மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு பூஜை!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

 

தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு பகுதி மலை சார்ந்த இடத்தைச் சார்ந்தது. அங்கே உள்ள பள்ளிக்கூடம் அருகே உள்ள சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகே பக்தர்கள் நேர்ச்சையாக தருகிற பசுக்களைப் பாதுகாத்துப் பராமரிக்கப்படுகிற கோசாலை உள்ளது. அங்கு 21 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 

m

 

இந்தக் கோசாலையில் வெளியே தகவல் பரவி விடாதபடி சுமார் 15 வேதவிற்பன்னர்கள் பசுக்களுக்கு சிறப்பு யாகம் பூஜை செய்துள்ளனர். நான்கு மணிநேரம் வேத பாராயணம் செய்து யாகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் சிறப்பு அம்சமாக, பசுக்களைச் சிறப்பாக ஜோடித்து பூஜை நடத்தப்பட்டது. அது சமயம் கோவுக்கு தங்கக் கொலுசும் மாட்டப்பட்டிருந்தது.

 

மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான உத்தரவு கிடைத்ததாகவும் பேசப்படுகிறது. அவர் மீண்டும் பிரதமர் ஆன உடன், வல்லநாடு வந்து, இந்தக் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு மேலும் சிறப்பாகப் பூஜை நடத்தப் போவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.

 

மேலும் இந்த கோசாலை பூஜை ரகசியமாக வைக்கப்பட்டதுடன் அதில் பங்கேற்க வந்தவர்கள் செல்போனில் கூட படமெடுப்பதற்குத் தடை போடப்பட்டிருந்தது. ஆனால் இந்த யாகத்தில் மோடியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர் மட்டுமே தனது செல்போனில் அதனைப் படமெடுத்துக் கொண்டாராம்.

 

இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட வேத விற்பன்னர்களுக்கு சிறப்பாக வஸ்தர தானம் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டுள்ளதாம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.