Tuticorin fishermen arrested

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் வழக்கம் போல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து 22 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதி தமிழக மீனவர் மலைச்சாமி என்பவர் உயிரிழந்த சோக சம்பவம் மறைவதற்குள் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ராமேஸ்வரம் மீனவர்களின் பிரதிநிதிகள் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்புவதற்குள் மேலும் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.