ADVERTISEMENT

காதல் திருமணம்; மகளையும் மருமகனை கொன்ற கொடூர தந்தை! 

03:26 PM Jul 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் காதல் திருணம் செய்த தம்பதியரை 26வது நாளில் மகளையும் மருமகனையும் வெட்டிக் கொன்றிருக்கிறார் ஒரு கொடூரத் தந்தை. உறைந்து போய்க் கிடக்கிறது அந்தக் கிராமம்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி மகாலட்சுமி. இவர்களின் ஒரே மகள் ரேஷ்மா (20). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்தார். ரேஷ்மா, அவர் கிராமத்தைச் சேர்ந்த தன் உறவினரான மாணிக்கராஜ் என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். மாணிக்கராஜ், கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருக்கிறார். இவர்களின் காதலையறிந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். முத்துக்குட்டிக்கு, மாணிக்கராஜின் குடும்பத்தாருடன் ஏற்கனவே பகைமை இருந்திருக்கிறது. மேலும் தன் மகளுக்கு வேறு இடத்தில் வரன் தேடியிருக்கிறார் முத்துக்குட்டி.

இதனிடையே கடந்த ஜூன் 26 அன்று ரேஷ்மாவுக்குப் பூப்புனித நீராட்டு நடந்திருக்கிறது. அதற்கு மறு நாள் ரேஷ்மாவும், மாணிக்கராஜும் தலைமறைவானார்கள். ஜூன் 29 அன்று திருமணம் செய்து கொண்டு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வசித்திருக்கின்றனர். அதே சமயம் தன் மகளைக் காணவில்லை என முத்துக்குடி எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இந்த நிலையில், காதல் தம்பதியர் ஊர் திரும்ப எண்ணிய நிலையில், நிலைமை சரியில்லை. இப்போதைக்கு திரும்ப வேண்டாம் என்று உறவினர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர்.

ஆனால், அதையும் மீறி காதல் தம்பதியர் கடந்த வாரம் ஊர் திரும்பியிருக்கிறார்கள். தன் தாயார் பேச்சியம்மாளுடன் மாணிக்கராஜ் தங்கியிருக்கிறார். இந்த தகவல் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டிக்குப் போயிருக்கிறது. பேச்சியம்மாள் 100 நாள் திட்ட வேலைக்குச் சென்று வருகிறவர்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை முடிந்து மாலை 3.30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, மகனும் மருமகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியில் அவர் கதறி அழுதுள்ளார். இவரின் சத்தம் கேட்டு கிராமத்தவர்கள் அங்கு திரண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெண்ணின் தந்தையான முத்துக்குட்டி அன்றைய தினம் மாணிக்கராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கட்டிலில் படுத்திருந்த மாணிக்கராஜை ஆத்திரத்துடன் வெட்ட முயன்றுள்ளார். அந்தச் சத்தம் கேட்ட மகள் ரேஷ்மா தந்தையைத் தடுத்திருக்கிறார். தடுக்க முயன்ற மகளை முதலில் சரமாரியாக வெட்டியவர், பிறகு மாணிக்கராஜை வெட்டியிருக்கிறார். சம்பவ இடத்திலேயே காதல் தம்பதி இருவரின் உயிரும் பிரிந்திருக்கிறது. தம்பதியரைப் பெண்ணின் தந்தை முத்துக்குட்டி கொன்று விட்டுத் தப்பியோடி இருக்கிறார். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளைப் போலீசார் முத்துக்குட்டியின் வீட்டில் கைப்பற்றினர். மாணிக்கராஜ், ரேஷ்மா இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த எட்டயபுரம் போலீசார் தப்பியோடிய முத்துக்குட்டியை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT