Skip to main content

மஞ்சள் ஏலம் தொடங்கியது... விவசாயிகளுக்கு விளைந்துள்ள நம்பிக்கை!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


தென்னிந்தியாவிலேயே மஞ்சள் விவாசயத்திற்கும் விற்பனைக்கும் தலைநகராக இருப்பது ஈரோடு தான். இங்கிருந்து தமிழகம் முழுக்க மட்டுமில்லாது இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஈரோடு மஞ்சள் விற்பனைக்குச் செல்கிறது. அப்படிப்பட்ட மஞ்சள் கரோனா தொற்றின் காரணமாகச் சென்ற ஒரு மாத காலத்திற்குப் பின் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மஞ்சள் ஏலம் இன்று துவங்கியது. 

 

Turmeric

 


இதை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என நான்கு இடங்களில் ஏலம் நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம்  22-ம் தேதி முதல் ஊராடங்கு உத்தரவின் காரணமாக மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
 

இந்த நிலையில் பெருந்துறை ஒழங்கு முறை விற்பனைக்கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இரண்டு இடங்களில் ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று முதல் மஞ்சள் ஏலம் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஏலத்தைத் துவங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசும் போது, "இன்று முதல் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மஞ்சள் ஏலம் துவங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ளும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பெருந்துறை மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 24 டன் மஞ்சள் வரத்து விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மதிப்பு 18 லட்சம் ரூபாய் அதேபோன்று ஈரோடு மஞ்சள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 30 டன் மஞ்சள் வரத்து உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று முதல் தொடர்ந்து மஞ்சள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவித்தார். 

 

http://onelink.to/nknapp

 

தனியார் மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், கரோனா தொற்றின் காரணமாக ஒரு மாதத்திற்குப் பிறகு துவங்கிய இந்த ஏலத்தில் 18 மஞ்சளை மாதிரிகளுக்கு வைத்திருந்தனர். இன்று முதல் ஊராடங்கு காலம் முடியும் வரை வெளி மாவட்ட, வெளி மாநில மஞ்சள் வியாபாரிகள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்றும் தற்பொழுது கிருமி நாசினி தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும். என்றார்.

 

ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் மஞ்சள் வியாபாரம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 கோடி வரை முடக்கம் ஏற்பட்டுள்ளது. இனி மஞ்சள் வியாபாரம் மெல்ல மெல்ல விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உயிர் சுவாசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.