Skip to main content

மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய் சரிவு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

புதுவரத்து மஞ்சளுக்கு எதிர்பார்ப்பு நிலவுவதால் பழைய மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய் வரை குறைந்துள்ளது. 


தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்து, சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழக மஞ்சளுக்கு வட இந்திய மாநிலங்களிலும் பெரும் வரவேற்பு இருப்பதால், இங்கிருந்து அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால், ஏல மையங்களுக்கு மஞ்சள் வரத்து 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.  இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது:

turmeric price suddenly decrease



சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். தற்போது புது மஞ்சளை எதிர்பார்த்து காத்திருப்பதால், பழைய மஞ்சள் விற்பனை குறைந்துள்ளது. நேற்று (நவ. 27) நடந்த மஞ்சள் ஏலத்தில் வழக்கமாக வரவேண்டிய வரத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்துள்ளது. 


கடந்த சில வாரங்களாக மஞ்சள் குவிண்டால் 7500 ரூபாய் முதல் 8500 ரூபாய் வரை விலை போனது. நடப்பு வாரத்தில் குவிண்டால் 1000 ரூபாய் வரை குறைந்தது. தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் 6500 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. 


சேலம் லீ பஜார் ஏல மையத்திற்கு வழக்கமாக 60 முதல் 70 டன் மஞ்சள் விற்பனைக்கு வரும். இதன்மூலம் 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஏலம் நடக்கும். நேற்று நடந்த ஏலத்திற்கு 30 டன் மஞ்சள் மட்டும் விற்பனைக்கு வந்தது. இவை 25 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.