/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/duraimurugan-art-dipr_0.jpg)
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு 03.10.2023 அன்று நான் எழுதிய கடிதத்தில், சுரங்க அமைச்சகத்தின் ஏலத்தினால் ஏற்படும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மாநில அரசு மட்டுமே பொறுப்பாகும் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அதில் என்ன அடிப்படைக் குறைபாடு உள்ளது என்பதை நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் கடிதத்தில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக், அரிட்டாப்பட்டியின் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியதாக சுரங்கத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததே தவிர நில விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
இருப்பினும் கனிமத் தொகுதியில் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளம் இருப்பதை நன்கு அறிந்த சுரங்க அமைச்சகம் ஏலத்தில் இறங்கியுள்ளது. இந்த ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றால், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்த எவருக்கும் இது ஒரு வீண் நடவடிக்கை என்பது தெரியும். சுரங்க குத்தகையை தான் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசு அறிந்திருக்கிறது. எனவே சுரங்க அமைச்சகத்துடன் பயனற்ற தகவல் பரிமாற்றத்தில் நுழைவதற்கு பதிலாக அதன் உரிமையை ஒதுக்கி வைத்துள்ளது. தற்போது சுரங்க அமைச்சகமும் ஏலம் விட முடியும் என்றாலும், சுரங்கத்திற்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளது.
நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்பது சாதாரன விஷயம். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க வேண்டிய நிலையில், மாநில அரசுக்கு மட்டுமே வருவாய் சேரும் போது, ​​மாநில அரசின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு ஏன் ஏலத்தில் இறங்கியது. தமிழக முதலமைச்சர், பிரதமரிடம் இந்தப் பிரச்சனையை எடுத்துக் கூறியதையடுத்து, சுரங்கத்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கனிம சுரங்கத்தை வழங்குவதை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)