Skip to main content

கோடநாடு வழக்கு; “ஓபிஎஸ்ஸுக்கு உண்மை தெரியும்..” - டிடிவி தினகரன் தடாலடி

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

TTV Dhinakaran said that OPS knows the truth in the kodanad estate case

 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வந்தவுடன் அன்று மாலையே எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் திரும்பி கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதற்கு அடுத்த நாள் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமாரிடம், ‘கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால்... மீண்டும் கட்சியில் சேர்க்கப்படும்  என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில் ஓபிஎஸ் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ‘ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூன்று பேரையும் தவிர மீதம் யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் இணைந்து கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், கோடநாடு வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை அரசு பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஓ.பி.எஸ் வெறும் வாய்ஸ் மட்டும் தான். ஆனால் மாஸ்டர் முதல்வர் ஸ்டாலின் தான். அவரது குரலாகத்தான் ஓ. பன்னீர்செல்வம் பிரதிபலிக்கிறார். கோடநாட்டில் குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியது அதிமுக அரசு. அத்தோடு இல்லாமல் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தியதும் நாங்கள்தான். ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ஜாமீனில் எடுத்தவர்கள் திமுகவின் வழக்கறிஞர்கள். அதுமட்டுமல்லாமல் ஜாமீன் தாரர்களோடு புகைப்படம் எடுத்தது முதல்வர் ஸ்டாலின். நிலைமை அப்படி இருக்க ஓ.பி.எஸ் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்கிறார்.

 

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலேயே கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அதுமட்டுமில்லாமல் நாங்கள் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறோம். மடியில் கணமில்லை அதனால் தான் நாங்களே சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம். ஆனால் ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுக்கிறீர்கள். அதிமுக அலுவலகம் நொறுக்கப்பட்டது உள்ளிட்ட பலவேறு விஷயங்களை திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் ஓ.பி.எஸ் செய்கிறார்” என்றார்.

 

தற்போது ஜெயக்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “மன்னிப்பு கடிதம் கொடுத்து கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று ஜெயக்குமார் கூறி எங்கள் மூன்று பேருக்கும் அதில் விதிவிலக்கு என்று சொல்லியிருக்கிறார். அதில் இருந்து என்ன தெரிகிறது. நாங்கள் மூன்று பேரும் மன்னிப்பு கேட்பவர்கள் அல்ல; எங்களுக்கு துரோகம் செய்துவிட்டதால் அவர்கள் தான் எங்க மூன்று பேரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை ஜெயக்குமாரே சொல்லிவிட்டார்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “ஜெயக்குமார் கோடநாடு வழக்கில் எங்களுக்கு பயமில்லை; திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் பேசி வருகிறார் என்று கூறுகிறார். பயமுள்ளவர்கள்தான் ஓபிஎஸ் குறித்து பேசுகின்றனர். மனசாட்சி படி, கோடநாடு சம்பவம் நடந்தபோது அவர்களுடனே இருந்தவர் ஓபிஎஸ். அதுமட்டுமில்லாமல் அதே நேரத்தில் எடப்பாடி அமைச்சரவையில் துணை முதல்வராகவும் இருந்தார். நிறைய உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிறைய தடையங்கள் அழிக்கப்பட்டதாகத் தகவல் கூட வந்தது. அந்த நேரத்தில் தற்போது ஆளும் அரசாங்கம் இதுபோன்று கோடநாடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ நடத்துவது தவறில்லை என்றுதான் நினைக்கிறேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.