Skip to main content

2 ஆயிரம் பெண்கள் திரண்டு உடைத்த டாஸ்மாக் கடையை மீ்ண்டும் திறக்க முயற்சி... பெண்கள் சாலைக்கு வந்ததால் பின்வாங்கிய அதிகாரிகள்

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆயிரம் பெண்கள் திரண்டு உடைத்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயன்ற தகவல் அறிந்து பெண்கள், பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தை தொடங்கியதால் டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்று அதிகாரிகள் பின்வாங்கி சென்றுவிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கடைவீதியில் கடந்த 2017 மே 20 ந் தேதிக்கு முன்பு வரை 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளால் பள்ளி சிறுவர்களும் மது போதைக்கு அடிமையாகும் அவல நிலை உருவானது. மேலும் மாணவிகள், பெண்கள், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக இருந்தது. பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டது என்பதால் மாதர் சங்கம் மற்றும் கிராம பெண்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர், வட்டாட்சியர், போலீசார் என அனைவருக்கும் புகார் கொடுத்தும் பலனில்லை. அதனால் 2017 மே 20 ந் தேதி கடைவீதியில் பந்தல் அமைத்து டாஸ்மாக் கடைகள் மூடும் வரை காத்திருக்கிறோம் என்று மாதர் சங்கம் இந்திராணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் 2 ஆயிரம் பெண்கள் ஈடுபட்டனர். இளைஞர்கள், மாணவர்கள் துணையாக நின்றனர்.

 

tasmac


இந்த தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் தொகுதி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் கடைகளை அகற்றிக் கொள்ள உறுதி அளித்தனர். அந்த உறுதிமொழியை எழுதிக் கொடுக்கச் சொல்லி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்கள் கேட்ட போது எழுதிக் கொடுக்காமல் வெளியேற முயன்றனர். எழுதிக் கொடுங்கள் என்று பெண்கள் அதிகாரிகள் காலில் விழுந்து அழுதனர். ஆனால் உதறிவிட்டு வெளியேற முயன்றனர். இந்த தகவல் போராட்டப் பந்தலில் இருந்த பெண்களுக்கு தெரியவர உடனே கிளம்பி வந்த பெண்கள் பேச்சுவார்த்தை நடந்த தனியார் திருமண மண்டபத்தை இழுத்து மூடி அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

அதன் பிறகும் அதிகாரிகள் கையெழுத்து போடாததால் வெகுண்டெழுந்த பெண்கள் கையில் கிடைத்த கல், கட்டை, போன்றவற்றுடன் ஊர்வலமாக சென்று 2 டாஸ்மாக் கடைகளையும் அடித்து உடைத்தனர். இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் தடுத்தும் தடையை உடைத்துக் கொண்டு சென்றனர். கடைகள் உடைக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் கொத்தமங்கலத்தில் 2 டாஸ்மாக் கடைகளையும் மூடுவதாக அறிவித்ததுடன் இனிமேல் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடைகள் திறப்பதில்லை என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் களைந்து சென்றனர்.

அதன் பிறகு கடந்த ஆண்டு ஒரு முறை மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க முயற்சிகள் நடந்தது. அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தான் பெண்களால் உடைக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துள்ளது. நேற்று இரவு இதனை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி, மாதர் சங்கம் இந்திராணி ஆகியோர் அதிகாரிகளிடம் இது பற்றி கேட்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது என்று பதில் சொன்னதால்.. அவசரமாக பெண்கள், இளைஞர்கள் கடைவீதியில் கூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அழைப்புக் கொடுத்தனர். அதன் படி இன்று காலை ஏராளமான பெண்கள், இளைஞர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன்.. டாஸ்மாக் கடை தற்போது திறக்கவில்லை. அதனால் களைந்து செல்லுங்கள் என்று உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

அதே நேரத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று சிலர் முழக்கமிட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண்களை சிலர் தகாத வார்த்தையில் பேசியதாக ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி மற்றும் பெண்கள் புகார் கொடுத்தனர். டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பெண்கள் உடைத்த டாஸ்மாக் கடையை மீ்ண்டும் திறக்க வந்த அதிகாரிகள் பெண்கள் போராட்டத்தால் பின்வாங்கிச் சென்றது அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.