A truck carrying carrots overturned on a mountain road and caused an incident

நீலகிரி மலை மாவட்டத்தில் அமைந்துள்ள உதகையிலிருந்து, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியே உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள காய்கறி மண்டிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள முல்லிக்கோரை என்ற பகுதியில் இருந்து மேட்டுப்பாளையத்தை நோக்கி ஒரு சிறிய ரக லாரி 4 டன் அளவிலான கேரட் லோடு ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது இந்த லாரி டேன் டீ (TANTEA) அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த 4 டன் அளவிலான கேரட் மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர் குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அதே சமயம் லாரியில் இருந்து சாலையில் விழுந்த கேரட் மூட்டைகளை அப்பகுதி மக்கள் சாலையோரமாகப் பத்திரமாக எடுத்து வைத்தனர். அதோடு விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதையில் பயணிக்கக்கூடிய கனரக வாகனங்கள் வேக கட்டுப்பாட்டோடு இயக்க வேண்டும் என போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரட் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.