
ஓபிஎஸ்சின் எம்எல்ஏ பதவியைப் பறிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க வேண்டும் என அவருடைய சேர்ந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சட்டப்பேரவை செயலகத்தில் முறையீட்டு மனு அளித்துள்ளார்.
அதில் 'போடிநாயக்கனூர் தொகுதியில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய சொந்த கட்சியினுடைய வேட்பாளரையும் அவர் இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு இருக்கிறார். எனவே இவ்வாறு தன்னுடைய சொந்த கட்சியினுடைய வேட்பாளரையே எதிர்த்துப் போட்டியிட்டதன் காரணமாக போடிநாயக்கனூர் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அரசியல் அமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணைப் பிரிவு இரண்டின் கீழ் ஒன்று என்ற அடிப்படையில் பன்னீர்செல்வத்தை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனவும் சட்டப்பேரவை வட்டாரத்தில் கூறப்படுகிறது.