Skip to main content

அடுத்தடுத்து இரண்டு உயிரை பறித்த சந்துக்கடை !

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

 

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமூகநல ஆர்வர்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் எதிராக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் வருவாய்க்கு பெரும்பகுதியை டாஸ்மாக் வருமானம் மூலமாக பெற்றுவருவதால் அதன் வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலையை அதிகாரிகளை வைத்து கண்காணித்துக்கொண்டு வருகிறது. ஆனாலும் லோக்கல் போலிசார் துணையுடன் டாஸ்மாக் மூடியிருக்கும் நேரத்தில் அதிக அளவு சந்துக்கடைகளை நடத்த அனுமதிக்கிறது.
 

இப்படி சந்துக்கடையில் மதுகுடித்த இரண்டு பேர் இறந்துபோனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

sandhu kadai


 

திருச்சி மாவட்டம் கண்ணனூரில் இருந்து கரட்டாம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் 2 டாஸ்மாக் கடைகள் அருகருகே அமைந்துள்ளன. 2 கடைகளுக்கும் சேர்த்து ஒரு பார் மட்டும் உள்ளது.
 

இந்த டாஸ்மாக் கடைகள் வழக்கமாக மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும். இங்கு, அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் மது அருந்துவது உண்டு. ஆனால், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாக காலை நேரங்களிலும், இரவு 10 மணிக்கு கடை மூடப்பட்ட பிறகும் சிலர் வெளியிடங்களில் திருட்டுத்தனமாக விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.


 

துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன், தாமோதரன், சதீஷ்குமார் (30). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக நேற்று காலை 9 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு பெட்டிக் கடை முன்பு நின்று இருந்தனர். அப்போது, தாமோதரன் வீட்டில் இருந்து ஒரு மதுபாட்டில் கொண்டு வந்தார். அந்த மதுவை 3 பேரும் குடித்தனர்.

 

 


 

 

 

பின்னர் சதீஷ்குமார் கூலி வேலைக்கு பஸ்சில் ஏறி துறையூர் சென்று விட்டார். சரவணன் மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் தள்ளாடியபடி திடீரென்று ரோட்டில் சுருண்டு விழுந்தனர். அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் சரவணன் துடிதுடித்து இறந்தார். அருகில் இருந்தவர்கள் தாமோதரனை மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
 

மேலும், பஸ்சில் சென்று கொண்டிருந்த சதீஷ்குமாருக்கும் திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர், துறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் தாமோதரன், சரவணன் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 

மேலும், இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.